Friday, February 24, 2012

நானிருக்கும் மட்டும் !

நானிருக்கும் மட்டுந்தானே ஆட்டம் - நானொதுங்க
நாணமின்றிப் பேயணைக்கும் தேகம்
ஊனுயிர்த்த நாள்வரைக்கும் ஒட்டம் - ஊன்படுக்க
ஓடிவந்து நாயிழுத்துப் போகும்
பேனிருக்கும் சூடுதேகம் காணும் - மட்டுமின்றிப்
போய்க் குளிர்ந்தாக விட்டுஓடும்
ஏனிருக்கும் போது உள்ளநாட்டம் - இன்னல்செய்ய
இன்னொருத்தர் மேனிதன்னைத் தேடும்

சொல்லிருக்கும் மட்டும்தானே வாழ்வும் - சொல்லிழக்கச்
சுற்றிநிற்கும் கொல்விலங்கும் பாயும்
இல்லையொன்று கையிலென்றுகாணும் - போதுவந்து
ஏதும் எம்மைசீண்டும் பூனைதானும்
கல்லதென்று எண்ணுமுள்ளம் யாவும் - நல்லவரைக்
கட்டி வைத்த வேலிபோடும் வாழ்வும்
இல்லை யென்று ஆகிப்போகும் நேரம் - ஆகுமட்டும்
ஏங்கமுற்று ஏழை நெஞ்சம் வாடும்

உள்ள மெண்ணும் மட்டும்தானே இன்பம் - உள்ளதின்றி
ஒட்டித் தேகம்வீழ எங்கும்சூன்யம்
அள்ளும் இன்பரேகை கொண்டதாகம் - அந்தமாகி
அத்தனைக்கும் சூழ்இருட்டென் றாகும்
வெள்ளிக்காசும் அள்ளிக்கொண்டு போகும் - தன்மையேது
வீணலைந்து வாழ்வழிந்த நாளும்
கொள்ளி கொண்டு ஊர் எரித்துப் போடும் - கண்டதென்ன
கோடிகொண்டும் இல்லையென்றுஆகும்

செய்யஏது மில்லை வந்துநாளும் வன்மைதானும்
சீரழிக்க ஏழைமீது பாயும்
பொய் யெழுந்தஆசை உள்ளம் கொள்ளும் - பேய்களாகிப்
பிய்த்தெறிந்து சாந்தியென்று தூங்கும்
கையெழுந்து காக்க வென்று முந்தும் - மெய்விழுந்து
கட்டைமீது நாம்படுக்கத் தீயும்
பையெழுந்து பற்றியுண்டு தீய்க்கும் - பாசம்கொள்ளப்
பக்கம் யாருமின்றி, வெந்துபோகும்

வல்லதேசம் செய்வதெல்லாம் நீதி - ஆகுமன்றி
வாழ்த்தும் பொய்க்குப் பொன்முடிச்சுப் பாதி
மெல்ல யாரும் பேசினாலும் போகும்- மேடையேற்றி
மென்கழுத்தைச் சுற்றிக் கோடுபோடும்
அல்லதல்ல ஆளும்போது யாரும் - அன்புகொண்டு
ஆனதோ ரினித்தவாழ்வும் சாகும்
வெல்லவென்று என்னசெய்த போதும் -சொல்!விதிக்கு
விட்டுஓடித் தப்பலாமோ கேட்கும்

சில்லுடைந்த தேரென்றாகித் தேகம் - பாதைவிட்டுச்
சீரழிந்து போக ஊரும் கூடும்
நல்லதெண்ணி நாலுவார்த்தை கூறும் -அல்லதென்னில்
நாஒறுத்து வாயுமிழ்ந்து ஏசும்
எல்லையின்றி வான்விரிந்த அண்டம் - எண்ணமான
தெட்டும் தூரம் விட்டழிந்து போகும்
வல்லஎண்ணம் கொண்டுவாளை வீசும் _ வாழ்வுதானும்
வானம் காணு மட்டும் தானே நீசம்!

No comments:

Post a Comment