Saturday, February 25, 2012

தொடரும் பயணங்கள்!!


(அன்று)

கடிதொரு பெருநடைஒளிதரு முடிவினை
காணாவென் றேநடந்தோம்
முடிவொரு சுகமென முனைவதில் ஒளிதரும்
மேன்மைதனை நினைந்தோம்
குடிமகன் தமிழ்நில குலமீழம் அழிவுற
கூடிநம் பகை எதிர்த்தோம்
முடிவினில் விடுதலை வருமென நினைந்துயர்
மேடுகள் மலை கடந்தோம்

சுடுநிலம் அடிதனில் சுடவலி சுகமென
சொல்லியே துயர் மறந்தோம்
படுவது பழியென பலதடை அருகெழ
பாதையில் நேர்நடந்தோம்
கொடுவிட அரவமும் இடிமழை புயலொடும்
குளிர் நதியிடை நடந்தோம்
குடுகுடு என விரைந் தெமதீழக் குறியினை
கண்டொளி பெறவிழைந்தோம்

வருவது ஒருபகை என எதிர் நிலைத்திட
வானொடு புவி சேர்ந்தே
ஒருபெரும் பிரளய மெனஎமை எதிர்கொள
ஏங்கி நினை வழிந்தோம்
தருமமும் இழிவுற தலைமுறை அழிந்திட
தமிழ்நில மழிவுறவும்
பொருமிய மனமுடன் புதையுறு குழிகளில்
பூக்களை விதை விதைத்தோம்

(இன்று):’

விதியது பிழைவிட விளைவது தவறென
வீறுட னெழுவதுடன்
கதியென நினைந்திட நடுநிலை தவறியோர்
காரணம் கூறெனவும்
சதியினை செயுமெவர் தனியறை சிறையிட
தகுமொரு பதில்வேண்டி
புதிதொரு வழியின்று நடப்பினும் முடிவினில்
பெறுவது விடுதலை காண்!

No comments:

Post a Comment