Sunday, February 5, 2012

சக்தியே, காத்திடுவாய்

             
தெள்ளெனும் நீரினில் கல்லைஎறிபவர்
தேங்கிக் கிடக்கையிலே எந்தன்
உள்ளமது கொல்ல வெள்ளங் கரைபுரண்
டென்னை இழுக்குதம்மா
கள்ளமதுஇல்லை கால்கள் நடந்திட
காணும்பெரு விசையாய் - அலை
துள்ளித் துள்ளி திரை வெள்ளம் கடலெனத்
தள்ளி விழுத்துதம்மா

சொல்லின் பெரிதெனப் பன்னெரும் துன்பங்கள்
சுற்றிக் கிடக்குதம்மா- இந்த
வல்லமனதினை வாழ்வின் இழிமைகள்
வந்ததே யசைக்கு தம்மா
கொல்லு மனங்களின் கோடரி வீச்சுக்கள்
கொட்டு மிரத்தமின்றி - உள்ள
பல்லு முடைபட வீழ்த்தியதாய் எனைப்
பக்கமுருட்டுதம்மா

நில்லுஎன எந்தன் நெஞ்சைநிறுத்தியும்
நல்லதை கொள்ளுகிறேன் -அவை
கல்லில் கட்டிக் கடல் தள்ளிடினும் வந்து
காத்திடுங் கைகளம்மா
வெல்ல முடியுமா வேதனைஎன்றிட
வீசும்கயிறாய்  அன்பு- எனை
அல்லல் குளத்தினுள் ஆழ்ந்து விடமுன்னர்
ஆருயிர் காக்குதம்மா

அன்புதனை மனம் என்றும் மதித்திடும்
ஆனவழி சரிதான்- உண்டு
என்பதைக் காட்டிடில் எந்த இதயமும்
அந்த இறைவடிவாம்
தன்னிலை தானுணர்வென்பது சற்றுப்பின்
தாமதமே, பெரிதாய்- அதில்
முன்னுரிமை கொண்டு மோக இருள் வந்து
முற்றும் கறுத்துவிடும்

No comments:

Post a Comment