Wednesday, February 1, 2012

இன்பம் எங்கே?


செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை உள்ளம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமிடும், பால்நிலவுங் கதிரோன்

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்ன
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோற்றநிலை கொண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் பட்ட
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்

செங்குருதி குறுகுறுக்கச் சீறுமலை போலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையில் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமெனும் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ

சிந்தனைக்குள் சினமெழுந்து செந்துளிர்கள்போலும்
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடை வாளும்
தந்தசுகம் என்னருமை, தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகின்  இன்பம்

*************************************



இதன் விளக்கம்:
 இன்பம் எங்கே?

செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை உள்ளம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமிடும், பால்நிலவுங் கதிரோன்

இந்தக் கவிக்கான  சிறு குறிப்புகள்>
சிவந்த கனிகள் தூங்கும் சோலை மரங்களில் (ஊஞ்சல்போல்)
அங்குமிங்கும் ஆடும்  குரங்குகள்  (கவி) போன்றும் ஆற்றலுடைய மன எண்ணமானது
(மனம் ஒரு குரங்கு) நிலவின்  முகத்தில் காணும் மறைகள் (கறுப்பு நிறம்)
போன்று
பங்கமுள்ள அல்லது களங்கமான நிலைகொண்டது. அதாவது  நிலவும் சூரியனும் அவை

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்னி
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ

முறையே சூடும் குளிருக்கும்  உதாரணமானவை  ஒன்றுசேரும் நேரம் காணும்
தகதகப்புபோன்றுமின்னிக் கொள்வது  எமது மனமாகும்.(( இங்கு சூரியனும்
சந்திரனுமொன்று சேர்ந்தால் சூரிய கிரகணமாகும் (பொற்கணத்து)))

 அந்தநேரத்தில் தக தகக்கும் ஒளி கிடையாது. எனவே எதிர்மறையாக மனம் இருள்
கொண்டது என்பதை இகழ்ச்சியாக அப்படி புகழ்ந்தேன்.

அங்கொரு “வள்” ஓசையிடுவது நாய் . நாய் ஆனந்தமாக  குரைத்து ஊளையிடும்போது
சங்கொலிபோன்று  தோற்றுமென்னதால் (தவறென்றால்
மன்னிக்கவும்) )அப்படிப்பட்டஓசைக்கு மதி (சூரியனை மறைக்கும் நிலவானது)
பயந்து விலகி ஓடியா போகும்?  (இல்லை. )
நிலவைப் பார்த்து நாய் குரைத்தது என்பார்கள் பிரயோசனமில்லை

அதுபோல் மனதை  திருத்த முடியுமா என கொள்க

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோற்றநிலை கொண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் பட்ட
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்

1. விளக்கில் தங்கியிருக்கும் நெய் எரிந்து முடிய திரியில் எண்ணெய்க்கான
தாகமுற்ற நிலைபோலவும் (அச்சமயம் எரிந்துகருகும் இருள்  கவ்வும்)
2. வெந்தணலில் எரிகின்ற ( தீ உண்ணும்) சந்தணக் கட்டையானது வரும்
வீழ்புனல் (மழை) பட்ட வுடன்  கரியாகிப்போகும் , அதுபோன்றும்---
கருமையானது உள்ளம். (சாந்த  ரூப உள்ளம் -- மீண்டும் இகழ்வுக்காய்
புகழ்ந்தேன்)

செங்குருதி குறுகுறுக்கச் சீறுமலை போலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையில் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமெனும் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ

உடலில் இளரத்தம் உள்ளபோது குறுகுறுப்பை துடிப்பை ஏற்படுத்தும் மனமானது
கடலலைபோல் சீறியெழுந்தாலும்.

உண்மையில் தாமரையின் இலை பொய்கையில் படிந்து கிடந்து ஒன்றாக வாழ்ந்தும்,
பொய்கையின் நீர் துள்ளி ஏறினால் இலை  தள்ளி விழுத்திவிடும். அது போன்று
அன்பு கொண்ட (அன்பற்ற)  உள்ளங்கள் வாழும் இந்த உலகானது ஒன்றும்
அதிசயமில்லை

சிந்தனைக்குள் சினமெழுந்து செந்துளிர்கள்போலும்
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடை வாளும்
தந்தசுகம் என்னருமை, தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகின்  இன்பம்!

அப்படிப்பட்ட உள்ளங்கள் கோபமுற்றபோது தீபோலும்  நிறங்கொண்டு சிவந்து
முளைக்கும் தளிர்களாகவும்  ஏற்கனவே காணும் புண்ணில் அரசன் கைகொண்ட வாள்
பதம்பார்க்கும் போது (வெட்டும்போது) ஏற்படும் வேதனையைஉண்டாக்குவதாலும் -
(இகழ்வுக்காக ’தந்த சுகம் என்னருமை’ என்றேன்) இந்த உலகம் எவ்வளவு இன்பமாக
உள்ளது!  (பெரும் நரகம் என்று பொருள் கொள்க)

No comments:

Post a Comment