மலர்மீ திருந்து மணம்வேறு சென்று
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீ திருந்து உயிரான சந்தம்
பிரியாத வரமொன்று வேண்டும்
அலையோடுதழுவி குளிரான தென்றல்
அசைந்தோடிப் பிரிகின்ற போதும்
கலைமீது கொண்ட எனதாசை என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
இருள் மேகங்கூடி இரவானதாகி
இடியோடு மழைவீழ்ந்த போதும்
அருளோடு தீபம் அணையாது என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
கடுநோயில் வீழ்ந்து கனவாகி வாழ்வும்
கடையென்று விதிசொல்லும் போதும்
தொடுவானும் மண்ணும் தெரிகின்றதாக
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
சுனைநீரும் என்றும் செழிவானபூவும்
சுழன்றோடும் மீனோடு வாழ்ந்தும்
வலைபோட மீனின் வாழ்வின்றிப் பூவாய்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
மலர்கின்ற காலை புதிதான வாழ்வை
மனதுள்ளே நினைவென்று காணும்
வரமீந்து என்னை இதயங்கள் போற்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
தொலை வானிலுள்ள நிலவான தோர்நாள்
வரவானில் மறந்திட்ட போதும்
கலைவானில் கீதம் காற்றோடு சேரப்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
தலைமீது மின்னல் இடிபோலத் துன்பம்
தனிவந்து வீழ்கின்ற போதும்
உருவாகு மன்பை எதுவந்தும் தீண்டாப்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
மலையான தொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும் போதும்
உருவாகும் அன்பு அதைமீறி வெல்லும்
பிரியாதவரம் ஒன்று வேண்டும்
No comments:
Post a Comment