Wednesday, February 29, 2012

இன்னுமா கடவுளே?

எத்தனைதான் இன்னும்வேண்டும் இறைவா- நீ
எடுத்தவரை போதும் என்ப தில்லையா
மொத்தமும்தான் கொள்ள வேண்டுமென்பதா - இவர்
முடியும்வரை கொள்வதென்ற சித்தமா
ரத்தமெல்லாம் கொட்டிகொட்டி ஆண்டவா - நாம்
ராப்பகலா அழுதுமின்னு மென்னடா
செத்த பாம்பை அடிப்பது போல் இன்னுமா - நாம்
சாகுமொரு இனம் அழிக்க எண்ணமா

வெற்றுடலம் தந்ததுவும் உன்செயல்- அதில்
வித்தெனவே தந்தஉயிர் உன்பொருள்
சுற்றிவரும் உலகிலெலாம் வாழ்பவர் - சுகம்
சொட்டுகின்ற இன்பவாழ்வு கொள்கையில்
சற்று மெமை ஈவிரக்க மின்றியே - இறை
சங்கரனே கொல்ல ஆடும்தாண்டவம்
சுற்றிப்பேய்கள் நின்று தோலைப் பிய்த்துமே - எமை
சித்திரவதை செய்வது போலாகுதே

என்னபாவம் செய்து விட்டோம் வாழ்விலே நாமும்
ஏது இந்த மண்ணில் கொண்டகுற்றமோ!
சின்னவராய் செந்தமிழைப் பேசியே - நாமும்
செய்யும்பிழை ஏது தினம் சாகிறோம்
மன்னவனாம் எங்கள் உயிர் காத்தவர் - தூய
மனமதிலே உத்தமராய் வாழ்ந்தவர்
உன்னதமாய் கொண்ட அவர் இலட்சியம் ஏன்
உதிரமதில் கரைய வைத்தாய் தெய்வமே!

நல்லவர்கள் என்பதுஇவ் வுலகிலே - ஏதும்
நனமையற்ற பிறவிஎன்னும் கொள்கையோ?
சொல்வதெலாம் சத்தியமென் றாகிடில் - இவர்
சுத்தமாக வாழும் தரம் இல்லையோ
 கல்மனது கொண்டு வெட்டிக் கொல்பவர் - தமைக்
காத்திடவே உன்மனது சொல்லுதோ
வல்லவனே நீயிருப்ப துண்மையோ - நம்
வாழ்வு என்ப தென்னபேயின் கையிலோ

மொத்தமாகக் தமிழினத்தைச் சுட்டுமே - பெரும்
மூர்க்கனாக பகையளிக்க நம்மையும்
கத்தியழும்குரல் இசைக்கு திருநடம் கொண்டு
காலெடுத்து ஆடுவது மேனடா
பித்தனென்று உன்னைச் சொன்னபோதிலும் - அன்று
பிள்ளை புத்திகாதில் சொன்ன போதிலும்
அத்தனாக அன்னை பாதி கொண்டதும் - உன்
புத்தி பாதியாகிப் போன ஏதுவோ?

கண்ணிரண்டும் கொண்டு எம்மைபாராய்யா - உன்
கனலெறித்தகண்ணை மூடு தேவையா
பெண்ணைப் பிள்ளை தாய் தனித்து சிறையிலே- போட்டு
பேசரும் வல்வினைமுடித்து கொல்கிறார்
எண்ணி மனங்கொண்டு அருள் தந்திடு - நீயும்
எம்மினத்தைக் காத்து உயிர் தந்திடு
வண்ணமெழும் வாழ்வுதனை வாழவும் - எம்
வளமிழந்த மண் செழிக்க வைத்திடு !

No comments:

Post a Comment