Wednesday, February 1, 2012

சிரிப்பொலி

வானக் கதிர்சிரிக்கும் வண்ணமலர் புன்னகைக்கும்
வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைக் கதிர்சிரிக்கும் சிற்றோடை சிலுசிலுக்கும்
சேர்ந்துவளர்: செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானப் பறவைகளும் காற்றொலியில் சலசலக்கும்
காட்டினிலே வண்டுமலர் கண்டு சிலிர்க்கும
போனவனைக் காட்டினிலே போட்டெரித்து மீண்டவனும்
போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்

நீரோடும் நதி குதித்து நெளிந்து மெலச் சிரிசிரித்து
நளினமிடக் கரைஅலைகள் நர்த்தனமாடும்
பேரோடு பூமியிலே பேரரிய வீரமிட்டோன்
பெண்சுகத்தில் ஈனமிடப் பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே ஒருவனாகத் தனித்திருக்க
உண்மைவழி நின்றிடினும் சிரித்திடுங்  காலம்
யாரோடிச் சென்றிடினும் வாழ்வோடி முந்த அதைப்
போராட எண்ண விதி சிரித்திடும் நாளும்

தானோடிச் சுழல்வதுடன் தறிகெடவே ஓடும்புவி
தன்னுடைமை சொத்து என்று தத்துவம்பேசி
வீணாகத் தலைஎடுப்போன் விதிமுறைமை கண்டுநலம்
வாழென்று கூறிப் பேய்கள் போடும் எக்காளம்
தானமிடக் கண்டுலோபி தலைதிரும்பிச் சிரித்திடுவான்
தாவணிப்பெண் இருவர்கூடின் சிரித்திடக் கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவாழ்வின் விதியறிந்து நகைபுரிய
தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்

No comments:

Post a Comment