Wednesday, February 1, 2012

அவனா இவன்?



கள்ளும் உண்ணக் கண்கள் செம்மை காணும்வண்டாகி
உள்ளும் புறமும் உயிரின் பூக்கள் உதரம்தனைநோக்கி
வெள்ளம்போலே புரண்டு வீழ்ந்து விடியும் பொழுதினிலே
தெள்ளத்தெளியும் வண்டின் நிலையில் திரும்பிப் பார்க்கின்றான்

வெள்ளைமேகம் விடியற்காலை வீசும்தென்றலிடை
தள்ளி தூரக் காணும் பொய்கை தண்ணீர் அலைமோத
அள்ளிக் கல்லைப் போட்டே அழகு ஆகா எனஉள்ளம்
துள்ளித் திரிந்த திசையின் பக்கம் திரும்பிப் பார்க்கின்றான்

நள்ளிரவானால் கனவுக்காட்டில்  நடனமாடும் மனம்
தள்ளிச்சென்றே பூக்கள் என்றே தீயில் தள்ளியதோ
அள்ளிப் பருகும் மதுவும் அழகுப் பூவின்வடி வெல்லாம்
வெள்ளி பூவாய் கண்ணை மின்னும் விடியப் பொய்த்திடுமோ

(இன்று....)

அழகுப்பூக்கள் ஆடும்காற்றில் அதனை ரசிக்கின்றான்
இதழைத்தொட்டு ம்..ம் வேண்டாம் இயல்பைக் கைவிட்டான்
குழலில் சூடப் பூக்கள் கொய்யக் கொடுமை என்கின்றான்
தழலில் காய்ச்சும் பாலில் தோன்றும் ஆடை ரசிக்கின்றான்

அள்ளிப் பூசும் நெற்றிப் பட்டைஅழகாய் மேகங்கள்
புள்ளித் திலகம் போலும் காணப் புரவி, கதிரோட்டி
வெள்ளைத் தேரில் வெய்யோன் வந்தால் விடியுமதுபோலே
உள்ளத் திடையே ஒளியும் காண உதயம் பெறுகின்றான்.

No comments:

Post a Comment