Thursday, February 2, 2012

சிரித்திடு மகளே

நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
.  நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
.  சொல்லும் சிரிப்பிதுவோ
 ஓலையிடை தென்னங்கீற்றி லொளிந்துநின்
      றோடும் மதி சிரிப்போ .விழி
போலும் கயல்துள்ளும் பொன்னெழில் நீரலை
.  போடும் நகைஒலியோ

வாழை மரங்களில் வந்துநீளும் குலை
.  வைத்த முன் பூவரிசை  -அதன்
ஏழைச் சிரிப்பினைக் கண்டனயோ - கனி
.    இன்சுவைப் புன்னகைத்தோ
கீழை வயல் மேடு கோபுரவீதியில்
       கூடி நின்றாடும் மந்தி வந்து
வீழபொலிந்த கனிஉண்டு ஆனந்தம்
      வேளை என்றாடியதோ


பச்சை வயல்வெளி  முற்றும் நிறைகதிர்
.   பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
.   சாய்ந்து சிரித்தனவோ - இடை
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
.   பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
.    தங்கும் சிரித்ததுவோ


கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
.  காணும் பசும் இலைகள் - நெடு
வானமதின் விழும்நீர் துளியில் பட்டு
      வாட்டம் கலைந்தபடி
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களும்
 .   தாங்கிச் சிரிசிரித்து  எழில்
ஆனதிந்தப் பெரும் பூமரச் சோலையும்
.         ஆனந்தக்கூத்திடுதோ


அத்தனை கொண்ட  சிரிப்பு மியற்கையின்
.    அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளென்
.    ரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
     பத்தரைப் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச்சிரித்திடு
    அற்புத பூமியிதே


No comments:

Post a Comment