Tuesday, January 3, 2012

உறுதிகொள் மனமே !

துள்ளுங் கயல்போல் துடித்தேநெஞ்சந்
தோல்வியில் வீழ்ந்தாலும் - அதை
அள்ளி அணைத்திடக் கைகளிருந்திடின்
ஆனந்த மாமன்றோ!
வெள்ளி முளைத்திடும் வேளை கயிற்றொடு
வாசலில்வந்தாலும் - விதி
தள்ளி நிறுத்திடத் தர்மம் இணைந்திடில்
தருமே சுகமன்றோ!

பல்லி ’இசுக்’கெனப் போகும் வழிக்கொரு
பாதகஞ் சொன்னாலும் - அது
இல்லையெனத் துணி வோடு நடந்திடு
உலகம் உனதன்றோ
சொல்லி வழித்தடை போட மனத்திடை
சோர்வே எழுந்தாலும் - நீ
அல்லி குளத்திடை போல மலர்ந்திடு
அதுவே வாழ்வன்றோ

சொல்லி எடுத்திடும் எண்கள் பிழைத்தொரு
துன்பம் நேர்ந்தாலும் - அவன்
வல்லஎழுத்திறை வைத்தகணக்கோடு
வாழ்வில் முன்னேறு!
இல்லைஎனத் தெரு வீதியில் நின்றிடும்
ஏழ்மைகிடைத்தாலும் - நீ
எல்லை வரை திடங் கொண்டு முயன்றிடு
ஏற்றம் உடைத்தாகும்

தள்ளி யிருந்தொருஆறு நடந்திடத்
தாகம் கொண்டே நீ - அது
துள்ளி நெருங்கிடும் என்று பொறுத்திடல்
இல்லா நடைகொள்ளு
கள்ளி முளைத்திடும் காடு வனம்எனக்
காலம் இருண்டாலும் - வழி
முள்ளு மிதித்து நீ வீறுநடைகொளு
முடிவில் வரும் விடிவு!

No comments:

Post a Comment