Friday, January 6, 2012

வண்டிக்காரனின் பாட்டு

கிராமத்தில் ஒரு மாட்டுவண்டிப் பயணம்


கேளடா தம்பிநீ கேளடா -நீயும்
கேட்டிடப் பாட்டொன்று பாடவா
ஆளடா பூமியில் வாழடா ஒரு
ஆன வழிவரு மாமோடா
************
கேளு தம்பிநீயும் கேளடா

கீழத்திசையிலே சூரியன் வந்தது
கோவில்தெருவிலே ஊர்வலம்போனது
ஆழக்கடலிடை கப்பலும்போகுது
ஆனந்தமாகவே பிற்பொழு தோடுது
கேளு தம்பிநீயும் கேளடா

வாழைமரத்திலே தேன்கனிவந்தது
வானம் பொழிந்திடப் பூமி நனைந்தது
காளை வயலினைச் சுற்றி உழுகுது
காற்றில் ஒருபட்டம் மேலே பறக்குது
கேளு தம்பிநீயும் கேளடா

ஏழை வயிற்றிலே என்றும் பசிக்குது
ஏய்ப்பவர் கூட்டமோ ஏறி மிதிக்குது
நாளை விடிந்திடும் வாழ்வெனக் கூறுது
நம்பி இருந்திடக் கண்களும் போகுது!
கேளு தம்பிநீயும் கேளடா

பாழும் பணம் ஒருபக்கமா யோடுது
பட்டினிதான்ஏழை சொத்தென ஆகுது
வாழும்விதி நல்ல உள்ளங்கள்கொல்லுது
வாட்டி வதைத்திடப் பொய்மையும் வெல்லுது
கேளு தம்பிநீயும் கேளடா

உண்மை உரைப்பவர் உள்ளே கிடக்கிறார்
ஓயாது பொய்யிட்டோர் உத்தமராகிறார்
திண்மையற்ற மனம் தேசம்நிறையுது
தேடியும் நீதியைக் காணத் தவறுது
--கேளு தம்பிநீயும் கேளடா

கள்ளர் கரங்களில் சாவிஇருக்குது
கண்ட கதவெல்லாம் அஞ்சித் திறக்குது
உள்ள நகைபணம் ஓடிமறையுது
உண்மை அறிந்தவர் ஊமையென்றாகுது
கேளு தம்பிநீயும் கேளடா

வெள்ளம் கூடவந்து வீட்டைப் பிரிக்குது
வேண்டா மென்று சொல்ல வேதனைகூடுது
பள்ளம் குழியெங்கும் சேறு நிரம்புது
பக்கம்நடந்திடப் பாடாய் விழுத்துது
கேளு தம்பிநீயும் கேளடா

மன்னரும் மக்களை மாக்கள் என்றுள்ளியோ
மாந்தர் குடியிடை வேட்டை நடத்துறார்
நன்னரும் பொற்குவை நாட்டில் எடுக்கிறார்
நாடுஅழிய நமக்கென்ன என்கிறார்
கேளு தம்பிநீயும் கேளடா

பன்னீரும் வெண்ணுடை பாலும் பழம் வெல்லப்
பாகும் கலந்திடு பஞ்சாமிர்தம்வேண்டாம்
பன்னெடு நாளென அன்னைமண் மடியில்
பாதிவிழிமூடி ஆறித்துயில்கொள்ள

ஆவிகள் போக்கிட ஆணை கொடுப்பவர்
அன்புவழி தன்னின் அர்த்தம்புரிவரோ
பாவிகள் தேவைக்கு ஆடுபலிகொள்ளும்
பாவம் நிறுத்திடப் பண்பு திரும்புமோ
கேளு தம்பிநீயும் கேளடா

கூவிஅழுதிடுங் கூக்குரல் போய்விடக்
கும்பிடும் தெய்வங்கள் கொண்ட இதயமும்
தாவிடுமந்தியை தள்ளிவெளிவிட்டு
தங்கமெனும் மனம் தாரணிகாணுமோ

நாமும் வளர்ந்திட நாடுவளர்த்திடும்
நல்லறிவு கொண்டோர் கையினில் கோல்கொடு
யாவும் தமதென எண்ணும் அரசனின்
வாளுமுறங்கட்டும் வாழ்வு பிழைக்கட்டும்

No comments:

Post a Comment