Wednesday, January 25, 2012

காலைக் காட்சி


காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல

காரிருள்சூழ் புவிமூடிக் கிடந்திடக்
காணரும் பேரெழில் போய்மறைய
பேரொளி கீழடி வானில் சினங்கொண்டு
பித்து பிடித்திருள் ஓட்டவர
ஊரெழுந் தோடிப் பயிர்வளர்க்கும் ஒரு
உத்தம வாழ்வின் இனிமைகளைப்
பாருழுதே வயல் பண்படுத்தும் ஒரு
பாமரன் பாடி உழுதுகொண்டான்

(அவன் பாடுவது)

திங்களொளி பட்டுத் தீய்வதுண்டோ -அவர்
தேகம்புண்ணாகித் தவிப்பதுண்டோ
தங்கமதைத் தணலென்பதுவோ - அதை
தள்ளி வைத்துச் சுடும் என்பதுவோ
பங்கய நீரிடை காணுமுக பிம்பம்
பாவிகள் வெட்டத் துண்டா வதுண்டோ
தெங்கினடிநின்று தென்றல் சுகம்தர
தின்னும்பாலும் கள்ளென் றாகிடுமோ

முல்லை மலர்தனை முள்ளென்பரோ - அதை
மண்ணிலெறிவதும் மாண்புடைத்தோ
இல்லை ஈதே வானில் ஒடும்முகில் பெருந்
தீயை மழையெனக் கொட்டிடுமோ
கல்லில் காணுவது கற்பனையாம் அதில்
காணும் மனங்களில் கொள்ளுருவம்
எல்லைவகுத்துண்மை எண்ணிவிடில் பின்பு
உள்ளம் மகிழ்ந்திட இன்பமன்றோ

ஆணும்பெண்ணோ இவர் வாழ்வினிலே -நிறை
வாகமிச்சம் முதியோர் பருவம்
காணும் கனவுகள் போன இளமையின்
கண்ட சுவைகளை நெஞ்சில்கொளும்
வானரமாய் கிளைமீதும் மரம் தனில்
தாவியதும் குயில் பாடியதாய்
ஆன வகையொரு இன்பம் அதைநினைந்
ஆடுவதும் மன ஆனந்தமே

காலைப் பறவைகள் கோல இசையிட்டு
காற்றிலெழுந்து பறந்திடவும்
ஓலைஊடே வந்து ஒங்கியசூரியன்
உள்ளே புகுந்த தகதகிப்பும்
சேலையணிமாதர் சுந்தர ஆடவர்
வேலைசெய்து ஆடிப் பாடுவதும்
சோலை மலர்கள் நிறைந்ததெனும் இளங்
கால எண்ணம் இன்பம் ஆகிறதே!
......................
வெண்மலர்பூத்திட வீணைஒலிஎழ
வெய்யவன் உச்சியில் ஏறிவர
தண்ணலை ஓடும் குளத்திடையே நடுத்
தாமரை மீது தவளைதுள்ள
கண்ணுடையாள் சிறு கோவிலிலே எரி
கற்பூரவாசனை காற்றிலெழ
மண்ணுழுதோன மனைகஞ்சியுடன் வர
மாமகிழ்வாகி நடையெடுத்தான்

No comments:

Post a Comment