Wednesday, January 25, 2012

தமிழின் சுவை!

தமிழ்சொல்ல உளமெந்தன் மகிழ்வாகுதே!
தமிழ்காண விழியெங்கும் ஒளிகூடுதே !
தமிழ் கேட்டு மனம்நின்று கூத்தாடுதே !
தமிழுக்கு எது ஈடு இவையாகுமோ?

(வேறு)

செந்தமிழின் சுகம் தென்றலதோ சுவை
செங்கரும்பின் அடியோ?
பைந்தமிழும் பனிகொள் குளிரோ பசும்
புல் வெளியின் அழகோ?
அந்தரவான் எழும் சந்திரனோ அதன்
சுந்தரத் தேனொளியோ ?
அந்தமிலாப் பெருஅண்டமதில் தமிழ்
எந்தளவு பெரிதோ?

வெந்திடவும் அனல் தொட்டதிலே மின்னும்
பொன்னின் மிளிர்விதுவோ ?
வந்தமழை தந்த வானிடையே வில்லின்
வண்ண வடிவங்களோ?
நங்கையவள் நட மென்பதெலாம் தமிழ்
நல்கு முயிர்த்துடிப்போ?
பொங்கிடுமோ அலை போலிதுவோ தமிழ்
பேச உணர்வெழுமோ !

சங்கிதுவோ ஒலிதந்திடுமே அதன்
சாரும் வெண்மை இயல்போ?
பங்கயமோ பனி தங்கியதோ அதன்
பட்டிதழ் மென்னியல்போ?
தெங்கினிடை இளங்காய் நடுவே கொண்ட
தித்திக்கும் நீரிதுவோ?
வெங்கதிரோன் உச்சிவேளை சுட நின்ற
வேங்கை மரநிழலோ?

கங்கையவள் முடிகொண்டவனோ அன்பு
கொண்டு வளர்த்ததமிழ்
செங்கனலின் விழி கண்டும் பிழைசொன்ன
சங்கப் புலவன் தமிழ்
இங்கு மனமதில் என்று மினித்திடும்
இன்ப முடைத்த தமிழ்
மங்குவதோ? அது கொள்ளும் துயர்எனில்
எங்கள் கரம் கொடுப்போம்

எங்கு மிணை யில்லை செந்தமிழே என
சங்கே முழங்கிவிடு
பொங்கிவரும் பகைஎந்த விதமெனக்
கண்டதைக் காத்துவிடு
மங்கை குலமவர் மானமெனத் தமிழ்
கொண்ட துயர் துடைத்து
செங்குலமே இந்த தங்கத்தமிழ் தன்னை
எங்கும் வளர்த்துவிடு!

No comments:

Post a Comment