Friday, January 27, 2012

வாழத் துடிக்கும் மனம்!

ஆழக் கடல்மகளும் ஆவென்று துள்ளியெழுந்
தார்ப்பரித் தோலமிட்டாள்
நீளக் கருவானில் நீந்துமதி வெகுண்டோடி
நிழல்மேகம்கண்டுபுகுந்தாள்
வேழப் பிளிறலென விண்ணூதிச் சுழல்காற்று
வேகமிட்டோடும் வழியே
வாழவென் றாவலெழ வழிதேடி யலைகிறாள்
வாழ்க்கையின் ஓரமொருத்தி

காளையும் வலிந்துவெஞ் சமரென்னும் விதிகொண்டு
காணது தொலைந்து போக
வேளைமுடிந்ததிவன் விட்டனன் இம்மையென
வெம்பிஊர் அழுதபோதும்
நாளையோர் நாள் வருவ னென்று வழிபார்த்திவளும்
நம்பியொரு வாழ்வு வேண்டி
வாழை யடிவாழையென வம்சம் பெருக்கிவிட
வாழ்வெண்ணித் காத்திருந்தாள்

வீழத் பெருகுமழை வீறுகொண் டிறைத்திட்ட
வெள்ளமோ பெருகி ஓடி
ஆழநீர் நிலைநோக்கி அதுசெல்லும் பாதையிடை
அடங்காது திசையும் மாறி
வாழவென் றிட்ட மனை வாரியிழுத் தழித்ததும்
வயல்மேடு காணிதோட்டம்
பாழாய் சிதைத்தோடும் பாதையிலே தேடுமிவள்
பசுஞ் சோலை காணுவாளோ

மேலைச் சிவந்தவெளி மேகங்க ளூடுஒளி
மேவுகதிர் மறைந்துபோக
சோலைத் தருவுலுக்கி சுற்றுமொரு சூறையதில்
சிதைந்துகிளை ஒடிந்துவீழ
பாலையில் மணல்பற்றி பலங்கொண்ட காற்றூதி
பாவியவள் கண்கள்நோக
காலத்  தடம்புரள கவிழ் என்றுவீழ்த்து சதி
கண்டுமிவள் ஏங்கிநின்றாள்

மூளப் பெருத்தவலி முன்மூச்சு வாங்கயிவள்
முகத்தி  னடையாளம் கெட
நாளம் பெருநாடி நடுங்கிமனம் பதைத்தேங்க
நஞ்சுண்ட கன்றுபோலே
வாழைப் பெருந்தோட்டம் வேழம் அழித்துவிட
வீழ்ந்த பல பச்சைமரம் போல்
ஈழமும்  காணவதி லோர்வாழ்வு தேடியெதிர்
காலமென் றேங்குகின்றாள்

நாதமென் சங்கூதி நங்கையிவள் மானிடமே
நீதிஉயிர் வாழ்வதெனுமோ
வாதம்பி றக்குமோ வாழவோர்  சம உரிமை
வையத்தி லுள்ளதென்றே
பேத உணர் வோடுபகை பேசுமிஞ் ஞாலமும்
பேதையிவள் பாவமென்று
மீதமுள கல்நெஞ்சில் மெல்ல நீர்கசியுமோ
மீண்டுமிவள் வாழவிடுமோ

No comments:

Post a Comment