Sunday, January 8, 2012

தமிழே இனிதாம் !



தமிழே இனிதாம் தமிழேஅழகாம்
தமிழே பெருநிதியாம்
தமிழே யுன்னைப் பாடப் பாடத்
தருமே மிக மகிழ்வாம்
தமிழே இதமாம் தமிழே சுகமாம்
தமிழே பல நினைவாம்
தமிழின் தாகம் பருகத் தண்மை
தருமே மனமுழுதாம்

அலையே கடலில்புரளும் அதுபோல்
அகிலம் முழுவதிலும்
கலையே கொண்டு தமிழே புரள்வாய்
கவிதை ஊற்றாவாய்
சிலையே அசையாநிற்கும் நிலைஏன்,
சிந்தைகொள் தமிழின்
நிலையே நினதில் பெரிதும் அழகால்
நினவை இழந்தாயோ?

மலையே நீயும் உயர்விற் பெரிதாய்
மனதில் கர்வமுறாய்
இலையே தமிழுக் கிணைநீ என்றே
இன்று மலைத்தாயோ
தொலைவும் காணாத் தொன்மைத் தமிழின்
தோற்றம் காணுகையில்
அலையும் வானச் சுடரும் நிலவும்
அதன்பின் அணியாமோ?

பொங்கும்தமிழோ புதுமை நதியின்
புனலாய் குதிபோட
தங்கும் எண்ணம் சற்று மின்றித்
தளளவென் றோடும்
எங்கும் தண்மை இன்பம் பரவ
இசையென் றொலிகூட்டும்
சங்கம்வளரின் பத்தெள் தமிழே
சரிநிகர் எதுவுண்டோ?

வெங்கண் கொண்டே வினைகள் செய்வோர்
விளைதுன் பந்தானும்
மங்கும் வகையில் மலையின்அருவி
மடிபோற் தமிழ்பொங்கும்
கங்குல்வானிற் கதிரோன் போலக்
கண்முன் ஒளிவெள்ளம்
எங்கும் பொங்கப் பிரவா கிக்கும்
இனிமைத் தமிழ் என்பேன்

No comments:

Post a Comment