Monday, January 2, 2012

தவறுகள் வருத்தும் கணந்தன்னில்


தெரியவில்லை அழகுமுல்லை தேன்மலர்த் தோற்றம்- நேர்
விரியவில்லை உரியவாறு விழிகளின் மாற்றம்
திரிவதில்லை இளைய தென்றல் இருப்பினும் வாசம்- கொண்டு
உரியமுல்லை மணமிதுவென் றெவரிடம் கூறும்

உரியதுள்ள எதுவென்றானஉண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் அந்த
எரியவைத்த தீபமென்று எம்முகம் காட்டும்

பெரியசொல்லை வரிகளுள்ள கவிதையில் தானும் - நல்ல
பிரியமுள்ள வகையில் சொல்லும் கவிதைகள் யாவும்
உரியநல்ல சுவரில் தீட்டும் ஓவியம் போலும் - கண்ணில்
தெரியும்போதுமனதை கொள்ளை கொண்டிடத்தோன்றும்

சொரிவதில்லை மதுவுமில்லை காகிதப் பூவும் - ஆயின்
எறிவதற்கு முடிவதில்லை எழுத்துக்கள் காணும்
அரியதென்று அதனில் தோன்றும் அன்பினைத்தானும் - கூறும்
பரிவுகொண்ட வரிகள் வாசப் பூவெனக்காணும்

கரியுமில்லை களங்கமில்லை காண்மதிமீதில் - என்ற
வரியும் சொல்லி வைத்தபின்னும் வான்மதி தேயும்
பெரிய துன்பம் போலுமந்த பாசங்கள் கூடும் -  வானில்
திரிவதென்ன தனிமைகொண்டு உருகிட நானும்

சரிவதெல்லை சரியதில்லை என்கிறபோதும் - ஒரு
சரிவினெல்லை காணல்என்றும் சரியில்லை ஆகும்
எரியும்கல்லை எறிவதில்லை என்கிற போது - அதை
விரியும்கைகள் எறிதல்போலும் விளைந்திட நாணும்

விரியவில்லை சரியவில்லை வெண்ணொளி வானம் - அங்கு
தெரியுமெல்லை முடிவுமல்ல ஒன்றெனக்காணும்
புரியுமந்த உறவும் என்றும் பொய்யென ஆகும் - தூரம்
தெரியும் பாதை செல்லச்செல்லப் பிரிந்திடக் காணும்

நரியுமில்லைக் காகமில்லை நம்மதுவாழ்வும் - கொண்ட
குறியும் வீழத் தவறுசெய்யின் குற்றமும் கொள்ளும்
சரியுமில்லை தவறுமில்லை இடையினில்வாழும் வெறும்
கருவியில்லை காணுமுள்ளம், கரும்பினில் சாறும்

பிழிவதில்லை பெருமைகொண்டு உள்ளவர்யாவும் - அவர்
விழியினுள்ளே கருமைகொண்ட கண்மணிதானும்
பழியும்சொல்லி விடுவதில்லை பாலென விழியும் காணும்
தெளிவுகொள்ள உதவும் வில்லை கருமை யென்றாலும்

கரியுமல்லை கனியுமில்லை காலமென்றாகும் -நல்ல
கருப்புமில்லை இனிப்புமில்லை கண்டிடும் வாழ்வும்
பெரியதல்ல பிழைகள் என்றும் வாழ்வதில் நேரும் பின்னர்
தெரிய உள்ளம் வருந்துமாயின் திருந்திய தாகும்

No comments:

Post a Comment