Thursday, January 26, 2012

துயர் கொண்ட சிறுமி


நீல விழிகளும் நீர்விழி யாகிட
நேர்ந்தது ஏதடியோ - சிறு
கோல முகமின்று கொள்ளுஞ் சிரிப்பினைக்
கொள்ளை கொண்டாரெவரோ
மேலை வானவெளி மேகம் வந்தேயுனை
மெல்ல மறைத்ததுவோ - இது
கால மென்ன உந்தன் கண்கள் பொழிந்திடக்
கார்த்திகை மார்கழியோ

தாளமிடு முந்தன் தாமரைப் பாதங்கள்
தாமத மாவதென்ன - ஒளி
சூழமலர்விழி சொட்டும் மகிழ்வெனும
சோதிகுறைந் ததென்ன
நாளும் பொழுதுமுன் நாவில்நடமிடும்
நல்லமுத மழலை - இன்று
பேழையில் மூடிய பொன்னகைபோல் எழில்
பொத்திக் கிடப்பதென்ன

பூமரக் கூடலில் போகு முணர்வினில்
புன்னகைக்கும் இனிமை - எழிற்
தாமரைப் பூவிரி தண்ணலை நீரிடை
துள்ளும்கயற் செழுமை
மாமரச் சோலையில் தூங்குங் கனியுண்ணும்
மாங்கிளி பேச்சினிமை இவை
நீமறந் தேநெளிந் தாடுமுட லின்று
நிற்பது வும்புதுமை!

கூவுங் குயிலதும் கொத்துங் கிளியதும்
கோபுரத்தின் அழகும் - துள்ளித்
தாவும் புள்ளிமானுந் தண்மைதருஞ் சுனை
தங்கும் குளிர்மைதனும்
ஆவும் இளங்கன்றின் அன்புமனமுங் கொண்
டாக்கிய தேனொளியே - மரம்
தூவும்மலர்களைத் தென்றல் கரம்கொண்டு
துள்ளிநீ ஓடிடவே

தேடி உலகினிற் தீமை களைக்கண்டு
தேர்ந்திடு நல்லறிவு - அங்கு
ஓடி வருந்தென்றல் உன்னரு கிற்புய
லாகும் நிமிர்ந்து நில்லு
கூடிவ ரும்பல கூட்டமுட னன்பு
கொண்டிடு சேர்ந்து செல்லு - அதில்
மூடி மறைந்தொரு மூடன் தீமைசெய
முன்வரக் கூடுமெண்ணு

நூறு மலர்களில் யாவுமொரு வண்ணம்
நேர்ந்த தில்லை மனதில் - துயர்
ஆறு, உலகையுன் அன்புமொழி கொண்டு
ஆளமுடியும் நில்லு
தேறு எதுவுன்னை வாட்டுது எண்ணங்கள்
தேனெனமாற்றிவிடு - மணம்
நாறும் மலர்தொட்டு நாளும்வீசு தென்றல்
நானெனத் துள்ளிஎழு

பேறு யிதுபெரி தானது பூமியில்
பெண்ணென நீபிறந்து - பல
மாறுதல் செய்திடும் மாபெரும் சக்தியின்
மற்றொரு தோற்றமிது
வேறு திசைகளில் ஓடும் மனங்களில்
வேற்றுமை பண்புணர்ந்து  - புத்தி
கூறு நல்லோர் உணர் வோடுவாழ்வி
லின்பம் தேடு உலகைவெல்லு!

No comments:

Post a Comment