Sunday, April 8, 2012

வாழ்வோடு....!


மானோடும் மயிலாடும் மரத்தோடு பூ ஆடும்
தானோடும் பூங்காற்று தண்ணீரில் அலையோடும்
வானொடும் முகிலோடும் வழிபார்த்து நதியோடும்
ஏனோடும் புவிதானும் இரவோடும் பகலோடும்

தேனோடும் பூவோடும் தினங்காணும் ஒளியோடும்
தானோடி நாளோடும் தகித்தவெயில் மேற்கோடும்
வானோடி மலையோடி வரம்போடும் வயலோடி
இனியோடல் போதுமென இலங்குகதிர் கடலாடும்

பணமோடிப் பெரிதாகிக் குணமோடிப் பொலியாமல்
மனமோடிச் சிதைகின்ற மகிழ்வோடிப் போம்வாழ்வில்
கனவோடும் காண்வாழ்வு கண்முன்னே ஓடவென
வினைகூட்டிச் செயலாக்க விளையாமல் ஓடுவதோ

சினமோடிச் சிந்தைகொள் கனமோடிக் களிகூட
மனமோடி மகிழ்வெய்த ஒருகோடி ஓடாமல்
வினைகூடிச் செய்விதியை விட்டோடச்செய்தேநீ   
உனைகூடும் நிம்மதியை ஓடிபோய் ஏற்காயோ?

இரவோடும் இருளோடும் படகோடும் கடலோடும்
கரையோடி மீளவென கரம்ஓடம் வலித்தோட்டும்
திரையோடும் திக்கதென தெரியாதே இருள்மூடும்
கரையோடு சுழன்றுதிசை காட்டுமொளி பெரிதாகும்

எதுகூடிச் செய்குவதோ அதுகூடிச் செயலற்றா
மதுகூடிப் பெருகுதென மனங்கூடி நிற்பவரை
இதுகோடிபெறுமெனவே மொழிகூட்டிச் செவியோதி
அதுபோலும் சுழல்விளக்கம் ஆகிவழி காட்டுவதால்

பனிமூடும் புகைமூடும் படர்காற்று அதை ஊதும்
கனிமூடும் இலையாடும் காற்றான ததைஊதும்
தனிமேகம் மதிமூட அதைமீண்டும் காற்றூதும்
மனமோகம் தனைஊத மகிழ்வுநிலா ஒளிராதோ!

.........................

No comments:

Post a Comment