Saturday, April 14, 2012

வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி


வெண்ணிலவு ஒளியெறிக்கும் வேளையொரு மாலையிலே
வீணையொலி கீதமெழப் பார்த்தேன்
கண்ணெதிரில் கால்சலங்கை கலகலத்த ஓசையெழக்
கன்னியவள் நடனமிடக் கண்டேன்
பெண்ணவளோ பேசரிய பொன்னெழில் பூம்பாவையவள்
பேரெனவோ கேட்க மனங்கொண்டேன்
அண்மையிலே சென்றவளைக் காண அதோ அவளிலையோர்
அழகிய மான் துள்ளி ஓடக் கண்டேன்

பொன்னென மான்துள்ளுமெழில் கண்கவர்கொள் மோகமிடப்
பின்நடந்து செல்ல மனம்கொண்டேன்
அன்னநடை போல்நடந்து அங்குதுள்ளி இங்குதுள்ளி
அது நடந்தபாதை கண்டு சென்றேன்
முன்னொரு புல்மேடை வெளி புள்ளிவைத்தபொன்னெழில்மான்
மெல்ல அதை தொட்டிட வென் றேக
மின்னியது நீல ஒளி கண்ணிரண்டும் கூசஅதில்
மான் மறையப் பூவிருக்கக் கண்டேன்

வண்ணமலர் நீலமெனும் வட்டஇதழ் கொள்ளுமெழில்
விந்தை தனைக் கொள்ள ஆசை கொண்டு
திண்ணமுடன் அருகணைந்து  கையெடுத்தேன் என்னவிது
தளதளக்கும் நீரலைகள் கண்டேன்
மண்மறைய அலையெழவும் பொய்கையெனும் தோற்றமுற
மெல்லெனமுன் விரியுமெழில் காட்சி
தண்ணொளியில் மென்மலர்கள் ஓன்று பல ஆயிரமாம்
தாரகையாய் வானிலெழக் கண்டேன்

வானிடையே பொன்னிழகு வார்த்ததெனப்  புன்சிரிப்பாய்
வந்து செலும் வெண்முகில்கள் மீது
தானிவளும் ஓடிவந்து தங்க நிலா மீதிருந்து
தமிழ்மகனே, கவிதை சொல்லு என்றாள்
தேனினித்த கனியிடையே தின்னும்சுவை நீயெடுத்து
தந்திடு நீ தமிழ்குழைத்து என்றாள்
மானெனவும் மலரெனவும் மங்கை தமிழானவள் வெண்
மதியிடையே நிழலென வென்றானாள்

நானிருந்து எழுதுகிறேன் நல்ல தமிழ் கோத்தெடுத்து
நூலில் மலர்மாலை யென்று சொல்லை
மீனெழுந்த வில்லெடுத்த வேங்கை கொடி மன்னர்களும்
மேவி வளர்த்தார் மூவண் தமிழை
நானெழுதி என்னசெய்ய நல்லதமிழ் செய்வர்முன்னே
நாவுழறி பாடுகின்றேன் தாயே
கூனெழுந்து குழிவிழுந்து கோலெடுக்கும் வயதினிலே
குறைஇருப்பின் குற்றம் மெனைக் காப்பாய்

No comments:

Post a Comment