Wednesday, April 11, 2012

நானா? கவிதையா? யார் சொன்னது?

       


மலையும் கதிரும் மதியும் மரமும்
மாபெருங் கோபுரமும்
அலையுங் கடலும் அதன்மேல் முகிலும்
அருவி ,சுனையாவும்
நிலையில் பெரிதாம் உலகம் என்னும்
நிலையற் றுருள்பந்து
அலையும் அண்டம் செய்தால் அவளே
அனைத்தும் பெரிதாவாள்

கலையும் கவிதைச் சுகமும் பொருளும்
காணும் கற்பனையும்
அலையும் மனதில் அகமும் நினைவும்
ஆக்கும் அவளேதான்
தலையும் உடலும் தந்தாள் சக்தி
தமிழை தானீந்து
இலையென் றோனிவ் வறிவிற் கிளையோன்
இவனைச் சொல்லென்றாள்

கவிதை எதுவும் எனதே யல்ல
கருணை விழிகொண்டாள்
புவியைக் கொண்டாள் புனலைச் செய்தாள்
பூகம்பம்செய்வாள்
அவிழும் பூவும் அனலும் காற்றும்
அழகும் செய்பவளே
குவியும் வார்த்தைக் கோலம் இட்டாள்
கேள்விப் பதிலாவள்

நானும் பொய்யே நாளும் பொய்யே
நாடும் நானிலமும்
வானும் முகிலும் வண்ணங் கொண்டே
விடியும் அடிவானும்
தானும் சிவந்தே எழுமோர்கதிரும்
தண்ணொளி நிலவோடு
ஊனும் உயிரும் பொய்யே இதிலே
இவனாம், என்செய்வேன்?


தாயே சக்தி தமிழைத் தந்தாய்
தானே பதிலாவாய்
வாயிற் குரலும் வார்த்தைப் பொருளும்
வரையும் ஓவியமும்
கோயிற் சிலையும் குலவும் மழலை
குழந்தை மனம்யாவும்
நீயே தந்தாய் அன்னை இங்கே
நீயே பதிலாவாய்

No comments:

Post a Comment