Tuesday, April 24, 2012

எனக்கு நானே ராஜா!

(இயற்கை காகிதப்பூவை பார்த்து கேட்கிறது)
கலை வண்ண தாளின் பூவே
. கதிர் காணும் வானம்பார்த்துக்
. கற்பனை இன்பங் கொண்டாயோ?
அலைந்தோடும் வண்டும்தேனை
. அருந்தாமல் போகும்வாழ்வு
. அதிலென்ன இன்பம் காண்பாய்சொல்?
குலையென்றும் கொத்தாய் பூக்கள்
. குவிந்தாடும் போதே தொட்டு
. குளிர் கொண்ட காற்றும் ஓடுதுகாண்
நிலை கொண்டதென்னே நீயோ
. நிறந்தானே வாசமில்லை
. நிமிர்ந்தாடும் இன்பம் ஏதுசொல்?

(காகிதப்பூ)
மகிழ்ந்தாடும் பூக்கள் வாழ்வு
. மணந்தாலும் வண்டின்தொல்லை
. மனங்கூசத் துன்பம் ஆகிவிடும்
நிகழ்வான திங்கே இல்லை
. நெருங்காது ஊதும் வண்டு
. நிதம் ஏய்க்கும் வேலை இல்லை காண்
அகல்வானின் வெம்மை எந்தன்
. முகம்மீது கொள்ளும் இன்பம்
. அதுபோதும் என்றும் என்வாழ்வில்!
இகம்மீதில் காணும் இன்பம்
. ஏகாந்தம் ஒன்றே உண்மை
. இதுபோதும் என்னை விட்டுவிடு

(இயற்கை)
படர்ந்தாடும் கொடியின் பூவும்
. பிறந்தாகும் பயனைக்கோவில்
. புகுந்தோடி வாழ்வில் கொண்டதுபார்
நடந்தாடும் மங்கை கூந்தல்
. இணைந்தாடி நன்மைசெய்து
. நாள்தோறும் இன்பம் பெற்றதுகாண்
அடர்தோங்கும் பூவின் தோட்டம்
. அழகென்னே பல்சேர்வண்ணம்
. இணைந்தங்கு இன்பம் கொள்ளுவதாம்
இடம்மாறி உள்ளோர்பூவே
. இவையாவும் இல்லாவாழ்வும்
. எதைகொண்டு நன்மை சேர்க்குதுசொல்

(காகிதப்பூ)
தொட்டாலுங் குத்தும் முள்ளும்
. தோதற்ற மணமும் சிந்தை
. தூங்கிடச் செய்யும் வாசமதும்
கட்டெழில் மங்கை கூந்தல்
. கறுப்பதைத் தூய்மை செய்தும்
. காண்பதில் மாயை கொண்டிடவும்
எட்டாத இறைவன் கோவில்
. ஏகினும் தாயின் அன்பை
. இழந்தேகும் வாழ்வும் வேண்டிலேன்
மொட்டாக முகிழ்ந்தாலும்பின்
. முடிவென்ப தொருநாள் ஆகி
. மண்மீதுவீழல் இல்லை காண்!

No comments:

Post a Comment