Tuesday, April 3, 2012

தினம் சக்தி வேண்டி


சுத்த சக்தி வித்து முன்றன்
சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
ஏதுபங்க மில்லையாம்

சத்தியத்தின் தேவதைக்குச்
சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
நிச்ச யித்த தாகிடும்
வைத்துள் அன்பு வார்த்தை கூறு
வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தை யாம்செ யல்திறன்கள்
வெற்றி வாகை சூடுமே

அண்டசரா  சரங்கள்கட்டி
ஆளு மந்தச் சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
கொள்ள இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
காலகால மாகவே

சுற்றி யோடும் எத்திசைக்கும்
செல்லு மிந்த பூமியைப்
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
பார்ப்ப திந்தச் சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
உள்மனத்தில் எண்ணிடில்

நித்த மும்நல் சக்தி யேற்றி
நாளும் மின்கலத் தினை
வைத்தி யங்கச் செய்வ தாக
வாழு மிந்த தேகமும்
புத்தொளி கிழக் கெழுந்த
போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
சக்தி யென்று கேட்டிடு

முன்னை யுன்றன் அன்னை பெற்ற
அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
அன்னை அன்னை யர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
தாயும் சக்தி தந்திடேல்
என்னதான் நடக்கும் வையம்
ஏதுன் கண்கள் காணுமோ?

No comments:

Post a Comment