Monday, April 2, 2012

பொன்னுலகம்


கண்டதும் விண்டதும் கண்டவர் கொண்டதும்
ஒன்றும் புரியவில்லை - இந்த
அண்டமும் பேரிடி மண்டலம் கண்டிடும்
ஆழ இருண்ட நிலை
கொண்டது நஞ்சதும் துண்டது இரண்டெனக்
கொன்றவன் எங்கள் பகை - இதில்
சண்டையும் நன்மையை தந்திடுமென்றிட
சாய்ந்து விழுந்த நிலை

தண்டமும் தந்தனர் கண்டமோ சாத்திரம்
தப்ப வழி சொல்லலை - உள
நொண்டியர் எம்மினம் முற்று மழிப்பதே
நாட்டில் வகுத்த கொள்கை
வண்டதும் ஓடியும் செண்டில் மதுவினை
கண்டதும் வந்தமரும் -அது
உண்டெனநல் வளம் பங்கிடவந்தன
ஓடிப் பன் நாடுகளும்

பெண்டிரும் பிள்ளையும் இரண்டு திசையினில்
சென்றவர் மீளவில்லை - இதைத்
தண்டனை தந்திடும் சட்டம் கண்கள் கொண்டும்
தாமதைக் காண்பதில்லை
தண்டமும் குற்றமும் தந்திடும் நாடுகள்
தம்மை நினைப்பதில்லை   -  அவை                      
கண்டதும், வந்ததும் எங்கள் நிலைகொண்டு
கண்ணை விழிப்பதில்லை

பண்டைதினம் முதல் கொண்டஎம்மண்ணிலே
கண்டவன் வந்திருக்க -  அட
நண்டென நம்மையே நாமே இழுத்திட
நாடு அழிந்து விட
குண்டரும் காடையர் கொன்றிடக் கைகளும்
கட்டியும் சுட்டொழிக்க அட
இந்த உலகமும் கொண்டாடுதாம் ஆகா,
இன்ப உலகிதென்று .

(மனித உரிமைகள் தின கொண்டாட்டம் நடைப்பெற்ற நாளில் எழுதியது)

No comments:

Post a Comment