Saturday, April 14, 2012

பாலைவனம் சோலை யாகுமா?

ஆண்டவரே  எமை மீட்கவென - பல
ஆண்டுகள் முன் பிறந்தீர்
வேண்டிநின்றோர் தம் பாவங்களை - உங்கள்
இரத்ததினால் துடைத்தீர்
மாண்டு அழும் இந்த ஏழைகளை - நீர்
மறுபடி காக்கவென
மீண்டும் பிறந்திந்தப் பூமியிலே எமை
மீட்டிட வாரீரோ

ஆண்டுபல பெரும் மேடுபள்ளம் - என
அலைந்தே நிலையழிந்தோம்
வேண்டுமென நல்வாழ்வையெண்ணி - விடி
வெள்ளியின் திசைநடந்தோம்
மீண்டுமொரு நல்வாழ்வு இதோ - எனும்
வேளையிற் பலமிழந்தோம்
நீண்டு செல்லும் இத்துன்பங்களை - நீர்
நிறுத்திட வாரீரோ

தேடுகிறோம் பசும்புல்வெளிகள் - எம்
தேவையை நீர் உணர்வீர்
வாடுகிறோம் வலிதானிழந்தோம்   எம்
வாசலில் பேயினங்கள்
நாடிழந்தோம் நம் இனமிழந்தோம் - நாம்
இருப்பது இருட்டறையில்
தேடுகிறோம் ஒளிவாழ்வுபெற - அருள்
தேவனே மீட்பீரோ

எத்தனை சிலுவைகள் சுமந்துவிட்டோம் - எம்
பாவங்கள் தீரவில்லை
எத்தனை கடல்களும் கடந்துவந்தோம் - எம்
தாகங்கள் தீரவில்லை
எத்தனை மலைகளும் ஏறிவந்தோம் - எம்
பாதங்கள் நோவெழுந்தே
எத்துணை வலிதனை பட்டுவிட்டோம் - எமைக்
காத்திட  வாரீரோ

பாலகனே உமை வேண்டுகிறோம் - எம்
பாவங்கள் நீக்கிவிடும்
காலமெலாம் நாம் கண்ட துயர் - உங்கள்
கருணையினால் செழிக்கும்,
மேலலுகின் அருள்தேவமைந்தா - நாம்
மீண்டும் பிறப்பவராய்
ஞாலமதில் நல் வாழ்வுபெற - எமை
ஆ..சீர்வதித் தருளும்

சிலுவையி னின்று மறுபடியும் - நீர்
ஜீவனம் பெற்றிருந்தீர்
வலுவிழந்தோம் இனி உயிர்த்துஎழ - நல்
வார்த்தையைக் கூறிவிடும்
மேலுகில் அந்த மூவுலகில்   -ஒளி
ஞானமுடன் திகழ்வீர்
பாலைவனம் போல் எங்கள் நிலம் - பசுஞ்
சோலை யென்றாக்கிடுவீர்

No comments:

Post a Comment