Sunday, April 8, 2012

போருக்கு வந்த புயல்

   
வெட்டியடிமின்னல் தட்டுமிடி சுற்றி
 வீழும் மழைத்துளிகள் -உயர்
வட்டமுகில் விண்ணைத் தொட்டுங் கருமுகம்
   விந்தை மகிழ்ச்சி இல்லை
எட்டுத் திக்கும்நிறை முற்றும் பெருமழை
  கொட்டிக் குளம்நிரப்ப - புயல்
பட்டிதொட்டிஎங்கும் பட்டப் பகல்வந்து
    பாடு  படுத்துதப்பா

மேகம்கறுத்தொரு கோபமுடன் ஒரு
  மூடர்படை நடத்தி -பெரு
மோகமெடுத் திந்த பூமியுடன் போரை
  மூள விளைக்குதப்பா
வேகமெடுத்து நல் கூரைகள் பிய்த்திங்கு
 வீசி யெறியு தப்பா - எமை
நோக எதிர்த்துடல் தள்ளிப்பலங்கண்டு
  நேரே பகைக்குதப்பா

கொட்டுது பேய்மழை கூச்சலிட்டுக் குடை
  கொண்டவர் கைபறித்து -  அதை
எட்ட எறியுது ஈர மழை பற்றி
   எத்தியும் ஓடுதப்பா
பட்டு மரங்களில் கொப்புடைத்தே யதை
   பாதையில் போடுதப்பா - பெரு
நட்டம் விளைத்தொரு குட்டிச்சுவரென
   நாட்டினை ஆக்குதப்பா

கட்டுடைத்து வெள்ளம் கூட்டிவந்து வீடு
   கொண்ட பொருள் சிதைத்து - கதிர்
வெட்டி யெடுத்திட விட்டநெல்லுவயல்
  வேண்டுமென்றே அழித்து
மட்டமென எமை தட்டிச் சிரித்திட
 மன்னித்து விட்டிடவோ - ஒரு
சட்டமிட்டு இதன் செய்கைதனை எவர்
  சற்றுக் குறைத்திடுவார் -

தொட்டு இழுக்குது கெட்டபுயல் சேரத்
 திட்டுது பேய்முழக்கம் - அதில்
வெட்டும் மின்னல் பயங்கொள்ள வைத்து மன
  வீரம் தனையழித்து
கொட்டுமழை கொண்டு கூதலிட்டு உடல்
  கூனிக் குறுக வைத்து - அட
நெட்ட நெடுவழிப் பாதையிலே எனை
  நிற்க விழுத்துதப்பா

கர்ஜனையோ கவிமேற் பிழையோ இது
காலத்தின் கோலமதோ - என்ன
அர்ச்சனையோ அட ஆவேசமோ எந்தன்
  ஆவி பறித்திடவோ
ஊர்ச்சனமோ எங்கோ உள்ளேஒதுங்கிட
  உள்ளத் துறுதியுடன் - நானும்
நேர்ச்செல்லென இங்கு நின்றதனாலெனை
    நேரப்பழி கொள்ளுதோ

No comments:

Post a Comment