Friday, March 23, 2012

முதல்வன்


(இந்தப் படத்துக்கு கவிதை எழுத கேட்கப்பட்ட கவியரங்கிற்கு
எழுதப்பட்டது.)


முதல்வன்

நீதிதேவன் கூற்று:

இளமலர்க ளெங்கும்நிறைந் திலங்குமெழில் சோலை
இன்னிசையும் தென்றலதும் இன்பந்தரும் வாழ்வை
பழமினிதும் சுவைமதுவும பசியதனைப் போக்க
பால்நிலவும் பனிகுளிரும் படர்ந்தினிமை சேர்க்க
எழும்உதய ஒளிஅழகும்  உச்சிவெயில் நிழலும்
என இனிமை வாழ்வளித்தாள் இயற்கை எனுமன்னை
அழமனமும் இழிவுடனே அஞ்சும்வகை செய்து
அழகுலகை அழித்தவனே இனிநிறுத்து போதும்!


மலைகடலும் வயல்கள்கொளும் மரகத மாவுலகை
மாலைவெயில் மஞ்சளுடன் மனம்கவரச்  செய்து
சிலையழகு மங்கையரும் செல்வருடன் தம்மைச்
சேர்ந்தவரும் கூடிவிளை யாடுமெழில் இல்லம்
கலைநிறைந்த மனமகிழ்வும கொண்டஒரு வாழ்வை
காணெனவே நல்லியற்கை கட்டமைத்த போதும்
கொலைபுரியுங் குற்றங்களை  கொடுமைகளைத் தூண்டி
குலைநடுங்க வைத்தவனுன் குணத்தை இனி மாற்று !



அந்தநேரத்தில்...
(வேறு  )                                  

மேக முடைந்து விழுந்தது வோஒரு
மின்னல் அடித்திடவே
தேக மதிற்கொடுங் கோரமெடுத் தொரு
தீயபெரும் உருவம்
சாக வரமிவன் தந்திடுவா னெனச்
சொல்லு முடல் முறுகி
ஆகக் கொடுமுருக் கொண்டொரு வன்திடு
மென்று முன்னே குதித்தான்

தூய மிளிர்வுடன் ஆடை அணிந்தவன்
நீதியின் காவலனை
பாயுமொ ளிக்கதிர் பட்டுஒ ளிர்ந்திடப்
பக்கமிருந் தவனை
நீயும்எ னக்கொரு தூசு கணக்கென
நெஞ்சினில் எண்ணிவிடு
நேயம் விடுத்திடு வாஉன்தீரமும்
நேரினில் காட்டிவிடு

எத்தனை தூய்மை அழித்தவனாம் இவன்
என்னுடன் நீசமமோ
கத்தி யழித்திட வெட்டிப்புதையெனக்
கட்டளையிட்டவன் காண்
சத்தியம் நேர்மையும் விட்டவர்பக்கமே
சார்ந்திருப்பேன் அறிவாய்
இத்தரை மீதினில் நீதிய ழிந்திட
என்செயல் காரணமே!

பித்தெனும் பிஞ்சுகள் பேசரும் பெண்குலம்
பிள்ளை முதியவர்கள்
அத்தனை பேரையு மள்ளி நெருப்பிடை
அன்று எரிய வைத்தேன்
பொத்தெனப் போட்டே எரித்ததும், பாமரர்
வெட்டும் குழி பதுங்க
முத்தென வெண்விழி கொட்டவர் மூச்சினை
மூடி மண்போட்டழித்தேன்

கத்தும் குரலெழும் போது இனித்திடும்
காண்பதும் ஆனந்தமே
குத்து மொலிக்கொரு கூவியழும்குரல்
கோடிஎன் இன்பங்களே
சித்த மிழந்தனை என்னை எதிர்த்திடும்
செய்கையை விட்டுவிடு
புத்திரனே உந்தன் பொன்னுடல் காத்திடப்
போ இதில் தோற்றுவிடு

  ---வேறு----

(நீதியின் தேவன்: உலகைப் படைத்த சக்தியைப் போற்றிக் கூறுதல்)
கண்களைத் தந்தவள் காணெனில் நல்லதைக்
காணுதல் முறைமை யன்றோ
பெண்ணிலே காதலாம் மென்னுணர் வாக்கினாள்
பிரியமாய் வாழவன்றோ
எண்ணெயுள் எரிகின்ற ஒளிவைத்தும் திரியுடன்
ஒன்றிடத் தீபம் செய்தாள்
எண்ணமதில் தூய்மை செய்தனள் ஆணும்பெண்

ஒன்றாகி வாழவன்றோ!

கண்களோ காணுயிர் கொல்லென்று சினங்கொண்டு
கசந்திடும் நெஞ்சமாகி
பெண்மையைச் சிதைத்தவர் பிறன்மனை கொள்ளவும்
பிழைபடும் மனிதமாக
கண்ணியம் அற்றவர் காடுறை மாக்களாய்
காதகர் பேய்களாக்கி
மண்ணிலே மாந்தரை மாற்றினாய் கொடுமையே
மறுபடி எச்சரித்தேன்

வெண்ணிலா நீலவான் தந்தவள் நிலமதில்
விளைந்திடப் பசும்பயிர்கள்
வண்ணமோ
நீலமாய் வைத்தனள்  ஆழியை
வடிவொடு பூமி செய்து
கண்ணிய வாழ்வுறக் கல்வியும் அறிந்திடக்

கற்றிடும் ஆற்றல் தந்தாள்
திண்ணிய கொள்கைகள் தினந்தின மழித்துநீ
தீமைகள் செய்யவைத்தாய்

நீலமும் பச்சையாய் நிறமிட்ட புவிதன்னை
நீஇரத்த மோடவைத்து
ஓலமும் கதறலாய் ஊரெல்லாம் அழுதிட
உலகதைச் சீரழித்தாய்
காலமாய் பெண்மையை அழித்ததைப் பிறர்விழி
காணவும் செய்துநின்றாய்
ஞாலமே நல்லதை விட்டு நடந்திட
நாளும்பகை வளர்த்தாய்                     


(வேறு---)
கண்கள் சினத்திடக் கண்டனவோ அவன்
காட்டிய வெஞ்சினமோ
புண்ணென வேதனை கொண்டுளம் மீதினில்
பொங்கிய கோபமதோ
வண்ணம் சிவந்திட உள்ளவனாம் கொடும்
வஞ்சகன் கைகளுடன்
எண்ணியதில் வென்று இவ்வுலகைக் கொள்ள
எட்டித்தன் கைகொடுத்தான்

வெற்றி கொள்ளப் பலப் போட்டிவைத்தார் அதில்
வெல்லுமவர் பொறுத்து
சுற்றி சுழன்றிடும் பூமியதில் பலர்
சந்தோச  வாழ் வினுக்காய்
குற்றமிழைத்திடா மாந்தர்களும் உயிர்
கொன்று குவித்தவரும்
சற்று பொறுத்திடக் காத்திருந்தார் மனம்
சஞ்சலம்கொண்டிருக்க

நீதிக்குக் காவலன் முன்னிருந்தான் மனம்
நேர்மையைக் கொண்டிருந்தான்
பாதிக்கு மேலாய் இழந்தவர்கள் நீதி
பார்த்துக் துடித்திருந்தார்
சாதிக்கவே சித்தம் கொண்டிருந்தும் அது
சாத்திய மாகிடுமோ
ஊதிப் பெருத்திட்ட பேய்களுக்குப் பலம்
ஓங்கிப் பெருத்திடுமோ

வையகம்நின்று சுழல்கிறது வெயில்
வாரி அடிக்கிறது
மெய்யகம் நின்று துடித்திட ஓர்குலம்
மாய்ந்து கிடக்கின்றது
பொய்யில் பிறந்தவன் செய்ததெல்லாம்
புவி சொல்லித் தெரிகிறது
பையவெனும் ஒருநீதிவென்றே அந்தப்
பாமரர் வாழுவரோ?

No comments:

Post a Comment