Thursday, March 22, 2012

வாழ்வும் துயரும்

இன்ன லினித்திட வேண்டுமெம் வாழ்வினில்
ஏற்ற மெடுத்திட நாளும்
மென்னுள்ள மீதினில்  தோன்றும் வலிகளை
மெல்ல மறந்திட வேண்டும்
தன்மை திடம்நெஞ்சில் வேண்டும் துயர்களைத்
தாங்கும் உரம்கொள்ள வேண்டும்
புன்னகை கொண்டிட வேண்டும் புயல்தனும்
போகும்வழி நிறைந்தாலும்

செந்நெல் வயலிடை ஊற்றும் மழைவெள்ளம்
சுற்றி வரம்பினுள் நிற்கும்
அந்நிலை விட்டுயர் வாகில்ஆ  டுங்கதிர்
அத்த னையும்கெட்டுப்  போகும்
தன்னள வைமீறித் தோன்றும் துயரினில்
தாங்கிடா துள்ளமும் சோரும்
பொன்னென் மனதுபுண் ணாகும் துன்பமது
போகும்வரை மௌனமாகும்

துன்ப நிலைதனை மாற்றும்  வழி கண்டு
தொட்டதெல்லாம் நலமாக
புன்மைகள் மேல்விழப் பூவாய் எண்ணிமனம்
பொல்லாப்பு நீக்கிடவேணும்
நன்னறிவோ டுயர் மாற்றம் பெறும்வழி
நாடியடைந்திட வேண்டும்
இன்னலும் இன்பமும் வாழ்வில் நிதம்நிதம்
எத்தனை மாறுதல்கொள்ளும்

விண்ணில் கதிர்வர வைத்த விதியினை
விட்டு விலகுவதில்லை
தண்ணிலவோ தடு மாறும் தினம்வர
தாமதம் ஓர்நிலை யில்லை
மண்ணில் மனங்களும் கொண்ட விதியினில்
மாற்றங்கள் ஏன்திட மில்லை
விண்ணொளி சக்தியே வைத்து விளையாடு
விந்தை நாமுன்கையில் பொம்மை

No comments:

Post a Comment