Sunday, March 4, 2012

இம்மையும் மறுமையும் ( சக்தி தா!)

இம்மையும் மறுமையும்
( சக்தி தா!)

ஒளிதா விழிதா உலகில் இளமை
உணர்வும் உயர்வும் தா
களிதா மொழிதா கனிவாய் திகழும்
கருணை மனமும் தா
எளிதாய் உணரும் விதமும் அழகும்
இனிதாம் வளமும் தா
தெளிவா மனமும் தெரிந்தே எதையும்
தொடுமோர் செயலைத் தா

வெளிதா வளிதா விளையும் எதுவும்
விரும்பும் வகையில் தா
துளிதான் எனிலும் துயரே இலதாய்
துலங்கும் வழியைத் தா
பழியாய் எதுவும் படரா தினமும்
பகலின் வெளுமை தா
சுழியாய் அலையும் இடரும் தொடரா
சுவையாம் வாழ்வைத் தா

மொழிதா செழுமை தமிழால் கவிசெய்
திறனும் உரமுந் தா
மிளிர்வாய் வருமின் னலையாய் தினமும்
மனதில் கருவுந் தா
பொழிவாய் மழையாய் புதிதாய் பொருளும்
பொருளில் நயமுந் தா
தெளிவாய் மனமும் திகழும் வகையில்
தேவி அருளைத் தா

நெளியா நடையும் நிமிர்வாய் உருவும்
நினதன் பினதால் செய்
அழியா திடமும் அறிவும் செயலும்
அருகா பெருகச் செய்
தொழிலோ நிதமும் பெருமைசொலவும்
தொழவும் உனையே செய்
எழிலே வரமாய் எதிலும் நிறைவாய்
இலங்கும் வகையாய் செய்

தழலே ஒளியின் பெரிதே யிதுபோல்
தினமும் நினைவில் நில்
விழலாய் அழியும் சிறுவாழ் வினிலே
வெறுமை விலகச் செய்
உழலே உயிரின் உடலின் இயல்பாய்
உருகித் துவளும் மெய்
குழலாய் கருகிக் குறுகிக் கோணிக்
குழியுட் புதையும் பொய்

மழையாய் இடியாய் மலராய் மணமாய்
மலையும் மதியென் றே
நிழலாய் வெயிலாய் நினைவாய் செயலாய்
நிலைத்தாய் நீயன் றோ
குழலாய் இசையாய் குழந்தை வடிவாய்
குலவும் தாயா கி
அழவும் சிரிப்பா மதிலும் கலந்தே
அணைத்தும் வெறுத்தாய் நீ

ஒளிவா னிடையே உயர்வாய் சகலம்
உருவாக் கும்சக் தீ
அழிவால் இதுவாழ் வணையும் வேளை
அருள்வா யொருமுக் தி
விழியால் அசையும் வெளிவா னிடையே
விண்மீ னாகச் செய்
கழிவாம் இதுவாழ் வினிமேல் வேண்டாம்
ஒளியென் றுனதாய் வை!

No comments:

Post a Comment