Thursday, March 22, 2012

வேண்டும் சக்தி தேவி!

 

அழகான ஓடை அதிலோடும்நீரும்’
அரும்பான மலர் போலும் வாழ்வும்
எழவானில் வெயிலும் ஒளிர்கின்ற கதிரும்
இதை மிஞ்சும் விதமான அறிவும்
விழ வாடும்பூக்கள் விரிகிற முகைகள்
விதமாக துயர்போக மகிழ்வும்
பழமோடு தேனும் பருகும்நற் சுவையும்
படர்கின்ற மனம் வேண்டும் தாயே!

கொதிகின்ற நீரும் குளிர் கூடும்பனியும்
கொத்தும் வல்லூறாகக் குணமும்
மதிவானில் குறையும் மழைதூற துளியும்
மணல்வீழும் நிலை தாழவேண்டாம்
கதியோடு புயலும் கடல் கொண்ட சினமும்
கரை ஏறக் குடிகாணும் அழிவும்
விதியாக வேண்டாம் வினைதீர்க்கும் தேவி
வியக்கும் நற்பெரு வாழ்வுவேண்டும்

நகை சிந்தும் போது நான்கொள்ளும் இன்பம்
நல்லோர்க்கு இன்னல்கள் ஆகா
வகையன்பு கொள்ளும் வாழ்வொன்று வேண்டும்
வருந்தாத உள்ளங்கள் வேண்டும்
பகையொன்று வேண்டாம் பரிதாபம்வேண்டாம்
பழமென்று இனிதான உறவும்
புகைகொண்டுதீயும் பொழுதொன்று வேண்டாம்
புன்னகை புன்னகை வேண்டும்

குயிலோசை கூவும் குரலின்பந் தானும்
கனிவோடு காதோரம் செல்லும்
வெயில் வீழும் மலையில் வீச்சோடு அதிரும்
விளைவான எதிரோசை வேண்டாம்
பயிலும் நற்கலைகள் பாம்பாக வேண்டாம்
படும்தூறல் மழைகண்ட தோகை
ஒயிலாக ஆடும் ஒய்யாரம் போதும்
உளம்மீது மகிழ்வொன்றே வேண்டும்

No comments:

Post a Comment