Monday, March 26, 2012

ஏணிப் படிகள்

வெற்றியின் படிகளில் கற்களும் குறையுது
வேண்டும் வேண்டும் தோழா
வற்றிய சுனைமீன் வாழ்ந்திடத் துடிக்குது
வானம் பொய்க்க லாமா
பற்றிலும் பரிவிலும் பக்குவம் நிறையுது
பாசம் விட்டுப் போமா
சுற்றிலும் இருள் மறைந் தோடுது ஓடுது
சோதி தோன்றும் தோழா

கற்றவை பாடங்கள் கலைப்பது கோவில்கள்
காணும் தென்னர் தோழா
உற்றவை தவறெனில் உணர்வது பயனது
உள்ளம் மாறு வாரா
அற்றது இனிதென ஆக்கிட வந்தவர்
ஆன தழிக்க லாமா
குற்றமும் செய்தவர் குரலது ஓங்கிடின்
கொண்ட பிழைகள் போமா

பெற்றது வாழ்வினைப் பிறரது கையினில்
பட்டு அழியா வாமோ
அற்புத வாழ்வினை ஆண்டவன் செய்தது
யாருக் குரிமை கொல்ல
முற்றும் அழியவென முழுது மெனதுவென
மோகம் கொள்ளு வானேன்?
புற்றி லரவமென பச்சைவிஷம் பரவப்
பார்க்கத் தீண்டுவாரோ

மற்றவர் தகைமையும் சற்றும் குறைவதில்லை
மனிதன் என்ப தாலே
சுற்றும் வாழ்விலறம் கொண்டு பூமியிடை
செய்த பாவம் ஒழிய
சற்றும் பகையுடைமை யின்றி மனம்மகிழ
சார்ந்த  வீடு உனது
பெற்றுவாழ்ந்திடென விட்டுநிலைதளரும்
பண்பு கொள்ளுவாரோ??

No comments:

Post a Comment