Saturday, March 24, 2012

நான் என்னும் ஒருவன்!

புரியாத பாடம் அறியாத மொழியில்
தினம்தினம் படிப்பவன் நான்
தெரியாத திசையில் தேரினைஒட்டித்
திக்கற்றுச் செல்பவன் நான்
கரியான இரவில் காகத்தை தேடி
கண்மூடிச்செல்பவன் நான்
பரிமீது ஏறி பரலோகம் தேடும்
பாவத்தின் காதலன் நான்

விரியாத வானம் விசையற்ற பூமி
விருப்போடு வாழ்பவன் நான்
எரியாத வெய்யோன் இறங்காதமேகம்
இதனூடே வாழ்பவன் தான்
பெரிதான ஞானம் பிறக்காத புத்தி
பெருமோட்சம் பெறஆசை காண்
கரியாகும் மேனி காத்திடத் தீயில்
கடுந்தவம் செய்பவன் யான்

சிரிக்காத கண்கள் சினந்தோடும் சொற்கள்
சிலைபோலும் இதயமும்தான்
சரிந்தோடும் நதியாய் வழிமாறியோடி
விதியெண்ணி அழுபவன் நான்
விரிந்தோடும் பாம்பை வளர்த்திடஎண் ணி
வளைபுற்றில் கரம் வைப்பேன் காண்
பிரிந்தோடும் பாதை இரண்டாகப் போனால்
பிழைவழி செல்பவன் நான்

முறிகின்ற முருங்கை மரம்மீது ஊஞ்சல்
மகிழ்வோடு கட்டுவேன் காண்
அரிகின்ற போது நுனிக்கிளை நின்று
அடிக்கிளை வெட்டுவேன் காண்
திரிகின்ற தென்றல் புயலாகும்போது
தெருவிலே எதிர் நடப் பேன்
புரிவதோ எல்லாம் பிழைஎன்கிறார்கள்,
பெரும்பிழை இவர்மொழிதான்

No comments:

Post a Comment