Thursday, March 29, 2012

அதிஷ்டமில்லாதவன்

நீரில் எழுதிவைத்தேன் நித்திரையில் பூப்பறித்தேன்
.  நெஞ்சிலெழும் கற்பனையை போற்றினேன்
வேர்இல் செடியை வெட்டி விதைநிலத்தில் ஊன்றிவைத்து
.  விளையும் என்றுகாத்து நிதம் ஏங்கினேன்
ஊரும்வானிடையே ஓடிவண்ண நிலவெறிக்க
.  உலரவென்று துணிதுவைத்து விரித்தவன்
பேரில் பெரியவனாய் புகழெடுக்க வேண்டுமென்று
.  பேரை மாற்றி மாற்றிப் பார்த்து தோற்றவன்

நாரில்பூ இணைத்தே நல்லதொரு மாலை கொண்டேன்
.  நாரிருக்க பூஉதிர்ந்து போனதேன்?
ஊரில் மேகம் மழை ஊற்றுகின்றபோது எந்தன்
.  உச்சிமுகில் மட்டும் பொய்த்துப் போனதேன்?
தேரில் தெய்வவலம் தெருவில்எங்கும் போன தெந்தன்
.  திக்கில் மட்டும் இருள்படர்ந்து காண்பதேன்?
யாரில் உண்மையின்று வாழுதென நொந்துமனம்
.  ஏது என்னை யும்எதிர்த்துச் செய்தவன்?

தாவும்அலைகடலில் தனி படகில்செல்ல மழை
.  தூற ஓட்டைபோட்டு ஓடவிட்டவன்
ஆறில் நீர்நடந்து அருவியென வீழதிசை
.  அறிதலின்றி நேர்படகு விட்டவன்.
போரில் வெல்லவொரு தந்திரமென் றெண்ணி நறும்
.  பூவை அம்பில் வைத்து வீசித் தோற்றவன்
ஏரில் வயலுழுது எள்ளு விதைத் தறுவடைக்கு
.  ஏக்கமுடன்  நெற்கதிர்க்காய் காத்தவன்

வாரிக் குதித்துவெள்ளம் வயல் வரம்பை மீறியதாய்,
 . வாலறுந்து போன பட்ட மானவன்
கூர்இல் கத்தியெனக் கொள்கையில்லாப் புத்தியதும்
 . கொண்டு இந்தப் பூமியிலே வாழ்பவன்
பேரில் பாவியெனப், பெண்ணறியாக் காதல்மனம்,
 .  பொன்னிலவு பொய்த்த வானமாகினேன்
பாரில் வாழ்வில் நடுப் பாதையிலே முள்ளிருக்கப்
 .  பார்வைவிழி மூடியிருள் செல்கிறேன்

No comments:

Post a Comment