வேகும் வெய்யோன் பகை தீய்த்திட எங்கள்
வானுக்கோர் சூரியன் தந்தவள்
வேகப் புயலொன்றைப் பெற்றவள் இன்று
விண்ணி லெழுந்து மறைந்ததேன்?
தாகத்தின் ஊற்றினை தந்தவள் நல்ல
தங்கத்தமிழ் காவல் ஈந்தவள்
யாகத்தின் தீயாய் எரிந்தவள் இன்று
யாவும் அணைந்திட சென்றதேன்?
வீரத்தின் சின்னம் விரைந்ததோ- ஒரு
வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவர் -பெரும்
சேனை படைகளை கண்டவர்
நேர்மை தன்மானத்தை சொன்னவர் -இன்று
நித்திரை கொண்டனள்- நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
பாவ உலகம் வெறுத்ததோ
பேரை உலககெங்கும் சொன்னவன் -பெரும்
போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
உண்மையில் பூமி பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
வஞ்சகம செய்தினம் கொன்றது
வீரத்தாயும் இதைக் கண்டனள் -உளம்
விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
கொண்டு நடந்தனள் தெய்வமே
தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
நாடகமாடி உடைத்தமோ
போனதுதான் திரும்புமோ -அந்த
பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பனோ- இந்த
நாடும் நமதென ஆகுமோ
தேனைத்திருநாட்டை ஆளவே ஒரு
தீரமகன் தந்த அன்னையே
தனைதலைவனின் பாதையில் நாம்
தாயகம் கண்டிடவேண்டுமே
நின்னை மனதினில் போற்றினோம் உன்
நிம்மதிக்கு இறை வேண்டினோம்
அன்னை விடைதந்தோம் வானிலே ஒரு
ஆழ்ந்த அமைதியை கொள்ளம்மா
இன்னுமொரு நாளில் எங்களின் தமிழ்
ஈழம் மலர்ந்திடும் நிச்ச்யம
விண்ணி லிருந்தெமை வாழ்த்தியே எமை
வீரமெடுத்திட செய்யம்மா
No comments:
Post a Comment