Friday, April 15, 2011

சக்தியின் சக்தி

தொம்தொம்தன தொம்தொம்தன என்றேபெரு விண்மீதினில்
நின்றே பெரு நடமே இடுவாள்
இம்மேதினிகண் கோடியில் பல்கோடியென் றெம்மேனியை
இங்கே உரு செய்யும் தொழிலும்
செம்மாலையில் அம்மேலையில் சென்றேவிழும் பொன்ஆதவன்
செய்காரியம் கொண்டான் எவரால்?
அம்மாபெரும் செந்தீயெழு பந்தானது விண்மீதினில்
அங்கோடிடச் செய்ததும்  இவளே

வண்டானது செந்தேனையும் உண்டாகிட வைத்தாளவள்
அம்மாருதம் எழுமோர் இதமே
கண்டானதும் ஓர்மாதினில் கண்பார்வையில் இன்காதலை
உண்டாகிடச் செய்வா ளிவளே
பெண்டானவள் வன்பேசினும் முந்தானையில் பின்மோகமும்
கொண்டே நினைவொன்றாய் விடவே
மண்ஆண்டிடும் பொன்வேந்தனும் மைசேர்விழி பின்னேயுலைந்
தன்னோர்மதி கெட்டே யலைவான்

துண்டாடிடும் கூர்வாளதும் சிங்காரியின் கண்பார்வையில்
எங்காகினும் வென்றாய் உளதோ
பெண்ணானவள் மென்மேனியும் சொல்லானதில் தன்ஒர்மமும்
இல்லாயினும் வல்லாளெ னவாம்
கண்டோம் பல சாம்ராஜியம் கண்சாடையில் செவ்வாய்மொழி
கொண்டோர்அசை வொன்றில் அழிய
மன்னோர்களும் பொன்வார்முடி மண்மேல்விழத் தூள்ஆகிடச்
செய்வாளவள் சக்தி பெரிதே!

நெஞ்சில் அவள் எண்ணமெடு நித்தமவள் அன்பைநினை
நம் வாழ்வினில் சக்தி தருவாள்
பஞ்சாகிடும் துன்பங்களும் பட்டானதும் தொட்டானதும்
பற்றும் துயர் விட்டேவிலகும்
வெஞ்சீற்றமும் கொண்டேயவள் வெல்வாள்பகை கொல்வாள் உனை
வேண்டும் வரம் ஈவாள் சுகமே
அஞ்சாதமனம் கொண்டேநிதம் ஆற்றல்தரும் ஊற்றாகிடும்
அன்பாம்பெருவாழ்வும் உயரும்

No comments:

Post a Comment