Thursday, April 7, 2011

கணினி என்காதலி - வைரஸ் தாக்கவே...

நேற்று நடந்தது நினைவில்லையே இந்த
 நெஞ்சினில் வேதனையே
தோற்றதுபோல் இந்தவாழ்வினிலே துயர்
 தோன்றுது காரணமேன்
ஆற்றியஎன்மன அனுபவ்ங்கள் நீ
 அழித்ததும் ஏன் விதியே!
வேற்றுமனம் கொண்டு விசமெனவே உனை
  வெற்றிடம் ஆக்கியதேன்?

எத்தனைநாள் உனை இன்பமுடன் தொட்டு
  எடுத்தனன் கைகளிலே
அத்தனையும் உன் அழகு முகத்திரை
  அடைந்திடும் வண்ணங்களே!
எத்தனைஆசையும் கொண்டிருந்தேன் -என்
 எதிரினில் சொர்க்கங்களே
நித்திரையும் விட்டு நித்தமும் உன் -எதிர்
 நிற்கையில் இன்பங்களே

இன்று மட்டும் எனை ஏய்த்ததுஏன்  நீ
இல்லை யென்றாகியதேன்
அன்று சொன்ன பல ஆயிரமாம் கதை
அத்தனை மறந்தது ஏன்?
சென்றதெங்கே என்செந்தமிழின் சுவை
சிந்து மின்இதழ்களிலே
நின்ற கதை பலகவிதைகளும் இன்று
சொல்ல நீ மறந்ததும் ஏன்?

கொடுமையடி நான் கொண்டவை -யாவும்
குறைவின்றிக் கொடுத்துவிடு
தொடுகையிலே நீமறைவினில் வைத்ததை
மறுபடி தந்துவிடு
விடுகதையும் அல்ல வேடிக்கையும் அல்ல
வெளியெனக் காட்டிவிடு
தடுப்பது யார் இந்தத் தரணியில் மீளவும்
தரும் சுகம் தந்துவிடு

No comments:

Post a Comment