Sunday, June 17, 2012

இல்லாத ஒன்று


பூவிருக்கும் தென்றல்வரும் புன்னகைத்து பூவிரியும்
போது மலராசை கொள்ளும் தென்றல் நில்லாது
தாவிவரும் காற்றிணையத் தன்சுகந்தம் தந்தும் அதை
தானெடுத்து ஓடும் பூவைத் தென்றல் எண்ணாது
மேவிவரும் முகில் அணைய முழுநிலவுந் தனையிழக்கும்
மேகம் கணம் நிற்பதிலை மோகம்கொள்ளாது
நாவில் எழும்சொற்களுக்கு  நல்ல சுவை கொண்டுதரும்
நோக்கமுண்டு உள்மனதில் நெறியிருக்காது

கனி பழுக்கும் காய்மறையும் காக்கையுடன் குருவிகளும்
கண்டு உண்ணும் உண்டபின்பு அதிலிருக்காது
ஏனிதயம் கொண்ட அன்பு என்றும்,என்றும் நிலைத்திருக்கும்
எண்ணங் கொண்டு வாழ்வமைக்க இடமிருக்காது
வானிருக்கும் நீலநிறம் வாழும்வரை தான்தெரியும்
விண்ணடைய வெட்டவெளி நிறமிருக்காது
தானெடுக்கும் கரும்பினிலும் தன்மைஅடிக் கரும்பினிலே
தேனினிக்கும் மேல் நுனியில் சுவையிருக்காது

ஆவிவரும் நீர்கொதிக்க ஆனந்தமோ துள்ளும்புனல்
அத்தனையும் விதிமுடிக்கும் மீதியிராது
கோவிலிலே சிலையிருக்கக் கொள்கைஇறை நம்பிமனம்
கொண்டுஅதைக் காண்பவர்க்குக் கல்லிருக்காது
பாவிமன எண்ணமெலாம் பட்ட வாழ்வின் துன்பமதைப்
பங்குகொள்ள யாருமின்றிப் பயன் இருக்காது
தேவியவள் சக்தியெனத் தேகமதில் கூடிவிட்டால்
தோன்றும் துயர்தானும் கணம் நிலைத்திருக்காது

புல்நுனியில் தூங்கும்பனி பச்சைஇலை குளிர்ந்திருக்கப்
பட்டு இணைந் தங்கிருக்கும் பகலும் விடாது
கால் நடக்கும் பாதையிலே கவனம் வைத்தால் முள்ளிருந்தும்
கண்டபடி குத்தி நிலை கடுகடுக்காது
மேல் நிலையில் பொன்விளையும் மனங்களிலே எதுஇருக்கும்
மென்மை எனும் நிழலிருக்கும் வன்மைகொள்ளாது
போலிருக்கும் பார்வையிலே பட்டிருக்க எண்ணமுள்ளே
பூத்திருக்கும் உண்மை அதில் பொலிந்திருக்காது


************************

No comments:

Post a Comment