Sunday, June 10, 2012

கவிதை போதும்


கவிதை எண்ணக் கசக்குதே யடிகண்ணே - இந்த
கணம் நிறுத்தடி கலங்குது மனம் பெண்ணே
அவிந் துடைந்துளம் வலியெடுத்தது புண்ணே - மனம்
ஆற்றிட வென எது இருக்கடி கண்ணே
குவிஇதழிடை மதுவடித்திடும் பூவே - நானும்
குடித்ததில் மதி மயங்கிட வழி செய்யேன்
செவி இனித்திடச் சொலும் பதமினிப் போதும் - இந்த
சிறு மதிமயங் கிடகிடக்கணும் நாளும்

புதிதொரு கிண்ண மதுவெடுத்தடி சேர்ந்தே - நீயும்
புதுச்சுவை கண்டு எனைமயக்கடி தேர்ந்தே
விதி அறுக்குது துடிதுடிக்குது மெய்யே - பட்ட
விதம் சுறுக்கென இதயங் குத்திடும் முள்ளே
நதி நடக்கிற விதம் நடக்கிற அழகே - நீயும்
நடமிடும்மயில் என விரிக்கணும் மெய்யே
குதிகுதிக்கிற அழகெடுத்திடு பெண்ணே - அந்த
குளுகுளுப்பிலே துயர்பறக்கட்டும் கண்ணே

மணிஅடித்திட கதவிரண்டுமே விண்ணில் - அவை
மளமளவென திறந்திருக் கட்டும் பெண்ணே
கணி சகசய எனக் கழித்தவன் கணக்கும் - தீர
கதைமுடித்தெனை வரசொல்லும் வரை என்னே
துணியென உடல் தொலையென விட ஏகும் - வரை
துணையிருந் தெனை தொடு மறக்கணும் கண்ணே
அணி அசை அடி தளை யெனும் சுகமெல்லாம் உன்
அசைவுடலிடை எழும் அது இனிப் போதும்

No comments:

Post a Comment