Sunday, September 11, 2011

என் வாழ்வு ஏனோ ?

[ என்.. என்று தொடக்கமிட்டு ஏதாவது ஒரு தலைப்பில் (என் வாழ்வு, என் நண்பன், என்ன என்ன இப்படி எதுவாகவும் இருக்கலாம் என்று) நடந்த கவியரங்கத்திற்கு எழுதியது

என் வாழவு ஏனோ

என்னென்று சொல்லாது ஏனோஇவ்வுலகிலே
என்அன்னை என்னயீந்தாள்
என்செய்வ தறியாது கண்கள்நீர் சொரியவே
என்வாழ்வை யிங்குகண்டேன்
என்நன்று என்அன்று என்னொன்றும் தெரியாமல்
என்னவோ வாழ்ந்திருந்தேன்
என்னெண்ணி என்னையும் இறைவன் படைத்தனன்
என்பதும் ஏதுமறியேன்

என்னவன் என்னிவன் என்நண்பன் அல்லவன்
எதையுமே அறிய அல்லேன்
என்மனம் வெண்பளிங் கென்றிடும் அண்மையில்
உள்ளதன் வண்ணங் கொண்டேன்
என்னவள் என்றொரு சின்னவள் வந்திட
என்வாழ்வு பங்கு கொண்டேன்
என்நலம் தன்னலம் இருவரும் கொண்டிட
எண்ணிலே மூவர் கண்டேன்

என்னது என்னது இன்பங்கள் கோடியாம்
என்றுளம் ஆவல் கொண்டேன்
என்மனம் என்னது எண்ணுவ தாற்றியே
என்புடல் கூசி நின்றேன்
என்னவோ ஆகியும் என்னமோ கூறியும்
என்மதி கெட்டலைந்தேன்
என்மன வானிலே என்மதி தேய்ந்திட
ஏனோ இருளில் நின்றேன்

என்னதான் வாழ்ந்தனன் இத்தனைகாலமும்
இன்பமாய் வாழ்ந்திருந்தும்
என்னதாய்ச் செய்தனன் என்னொரு பிள்ளை! ஆ..
இவனென்ற சொல்லுங் கேட்டேன்
என்விதி இங்கிவன் என்னுடன் சேர்ந்தனன்
என்பதும் கண்டிருந்தேன்
என்னருள்தேவிநீ என்னுடை வாழ்வெனும்
இதைநீயும் ஏன் படைத்தாய்?

1 comment:

  1. என்.....என்...நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete