Thursday, December 9, 2010

நீதிக்கு முன் நிறுத்து!

ஓடித்திரிந்தவளும் உறங்கிடினும் உலகமதின்
மூடிக்கிடந்தவிழி மெல்லத்திறந்துவிட்டாள்
வாடிகிடந்துமிவள் வாழ்வழித்துவிட்டவரை
தேடிச்சிறையனுப்ப திடம் கொண்டெழுவாயோ.

பாடிபறந்தகுயில் பாட்டிசைத்து சோலைதனில்
கூடிகழித்திருக்க குரல்வளை நெரித்தவரை
தேடிப்பிடித்துலகில் தீயருக்கு விலங்கிட்டு
ஆடிகடன்முடிக்க ஆணையிட்டு நீ எழுவாய்!

பூஞ்சரமாய் விடுதலையை போற்றிமனமெழுவே
ஏன்சிரித்து வாழ்ந்தவளை இத்தனை கொடுமைசெய்தார்
தேன்சுவைத்த வாழ்வுதனை தேவமகளாம் இவளை
ஊனழித்து சிதைத்தவரை உள்ளேஅனுப்ப எழு!

வெட்டியவன் கைளினை விளங்காமல் போகஅவன்
கட்டிலில்படுக்க வைத்து கண்ணிரண்டு பொய்த்துவலி
பட்டுபெருந்துன்பம் பாவியவன் கதறியழும்
மட்டும் மனம்ஆறாது மகனே துடித்திடடா!

காதகப் பேய்களங்கு கடித்துக் குதறுவதாய்
மாதரைப் பிள்ளைகளை மதத்து வெறிபிடித்து
சேதமழித்துஅவரைச் செத்துவிடசெய்பவரை
நீதிக்கு முன்நிறுத்தி நெஞ்சம் அமைதிகொள்ளு!

1 comment: