Monday, October 1, 2012

விதி தானோ!

கிட்டும் கவலைகள் வெட்டித்தறி யவை
கட்டிக் கடலிடை எறி நீயும்
பட்டுத் துடியிடர் விட்டுப் போனது
வட்டப் புவியிடை எனநாளும்
கட்டிக் குலவிடு கையில் தினமெடு
காணும் மகிழ்வினை விட்டோடி
எட்டுதிக்கிலும் இருளைக் கண்டனன்
எனநீ வீணே அலையாதே

தட்டிக் கதவினில், கொட்டக் கூரையைப்
பிய்த்துத் தருவது நிஜமல்ல
சுட்டுக்கொள்ளென  வட்டப் பரிதியில்
பட்டுப் பொசுங்குதல் வாழ்வாகும்
கொட்டும் மழையுடன் சட்டச் சடவென
வெட்டும் மின்னலும் இடிபோல
இட்டுத் தடைகளை இடரைச் செய்வது
இந்தப் புவியுடை வாழ்வாகும்

பட்டுத் தெளியெது விட்டுபோனவை
பகலின் வானச் சந்திரனாய்
எட்டும் வகையில என்றேதள்ளிடு
எதிரே கொண்டது இன்பமென
கிட்டும் வாழ்வினில் கட்டுப்பாடுடன்
கொண்டது வரையில் போதுமென
தொட்டுத் துணிவுடன் விட்டுக் கொள்கையில்
துவளா வாழ்வுடன் நடைபோடு

நெட்டைச் சிறகுடை பட்சிக்கூட்டமும்
நீள்விரி வானில் நெடிதோடிக்
கட்டைப் புல்வெளி காட்டுப் புதரெனக்
குட்டை குளங்கள் கடந்தேகி
வெட்டக் குனிந்திடும் விளையுங் கதிருள
வயலைக் கண்டே வாழ்வு பெறும்
முட்டும் வலியுடை முடியா வாழ்விலும்
மட்டும் விதிகளை மீறாதே

நட்டுக்கழனியில் பச்சை நெல்லினை
நாளும் புனலுற   வழிசெய்து
இட்டும் உரமதை இருகண் பார்த்திட
எதுவும்  இடைபுகுந் தழியாது
வெட்டிப் பதரிட வீசுங் காற்றிடை
விதமும்  பிரித்து விற்றாலும்
கட்டிப் பலமனை காசும பணமென
காரில் திரிந்திட வாழ்ந்தானோ

எட்டிப் பறித்திடும் இயல்பைக் கொண்டது
இருளின் வண்ணக் காக்கை யென
தட்டிப் பறித்திடு தன்னலப் பித்தரும்
தம்முடை வாழ்வில் முன்னேறி
சட்டை பையினுள் மொத்தக் காசுடன்
சார்ந்தோர் தம்மை ஏமாற்றி
விட்டுக் காசினை வட்டிக்கென பலர்
வாழும் வாழ்வும் விதிதானே

2 comments:

  1. நல்ல வரிகள்... சிலது விதிகள் அல்ல... சாபம்...

    ReplyDelete
  2. ஒருகோடு வரிதானும் தொடராக தரும்வாழ்த்து
    உயர்வான மனம் காட்டுது
    தரும்ஏடு தனில்காணும் தமிழான சுவையென்று
    தரம்கூற மனம்பாடுது
    தரைமேடு பள்ளங்கள் தடியோடு பெருங்கல்லும்
    தடை செய்யும் வாழ்வானது
    வரைகோடு இல்லாது வழிகின்ற பூந்தேனாய்
    வாழ்வில்நற் சுவை கூட்டுது

    உரையோடு நான்வாராப் பொழுதெல்லாம் தொலைநின்றும்
    உதிர்கின்றேன் விழிசிந்துது
    அரைகோடி லட்சங்கள் அதுபோலும் இலட்சங்கள்
    அளித்தேன்நன் றிகளென்பது
    விரைவோடு ஒருபோதும்தவறாது வருகின்ற
    வீணையின் இசைபோன்றது
    திரையோடு கடல்மீது திசைகாணா படகென்னை
    திசைகாட்டி மகிழ்வூட்டுது

    கிரிகாசன்

    ReplyDelete