Sunday, December 2, 2012

வாழிய தேவி



இந்தமேகம் இடியிடித்தால் எழுவது நாதம்
இடையிடையே இதயமதில் இன்கவி மின்னும்
வந்தமழை வழிவதென்ன வார்த்தைகளாகும்
வாரியன்புத் தூறல்கொட்டிச் சோவென வீழும்
அந்தரவான்  கொட்டுமழை ஆறிட மௌனம்
அகத்திடையின் கவிதைவிழைந் தாற்றிடும் சாந்தம்
சந்தமெழுங் கவிதை வெள்ளம் சலசல ஓட்டம்
சாலையோரம் தேங்குநீரில் துளிகளின் தாளம்

மெத்தையெனும் மேகங்களின் மௌன ஊர்வலம்
மேலெழுந்து வான்பறக்கும் பட்சிகள் கூட்டம்
முத்தமிட நீள்மலையை மேகமும் தேடும்
முற்றிணைவில் நதிபிறந்து கிளுகிளுத்தோடும்
சத்தமிடும் குயிலினிசை சுனையலை தாளம்
சாரல்மழை தேகம்தொடச் சலசல த்தாடும்
அத்தனைநீள் தருவினிலை அழகிய ஆட்டம்
ஆகுமின்பம் தமிழிசைக்க அற்பமென்றாகும்

நிந்தனைகள் இல்லையிங்கு நித்தமும் ராகம்
நீலவிண்ணில் காயுமொளி நினைவெழு மோகம்
சுந்தர விண்மீன் மறைத்து சென்றிடும் மேகம்,
சொல்ல வருங் கவிதையின்பின் சக்தியி னூற்றும்
மந்திரங்கள் அல்லத் தமிழ் மாற்றிடும் உள்ளம்
மதுவழியும் பூவிருந்து மாந்திடும் வண்டும்
எந்தவிதம் போகுமென்ற இயல்புடன் நாளும்
இன்கவிதை யுண்பவரும் எடுத்திடக் காணும்

முத்தொளி வெண்சூரியனும் முழுமதிபொன்னும்
மோகமிட மாலைசெய்து தாரகை கூட்டி
சத்தியத் தாய் நீலவிண்ணென் னாடையும் பூண்டு
சாகரத்தின் ஓசையிலே சிரிப்பதைக் கண்டோம்
கொத்துமலர்ச் சோலைதொடும் தென்றலின்வாசம்
கூட்டியதாய் சந்தணமும் கொள்ளொரு மேனி
வைத்தவளிவ் வண்ணத்தமிழ் வாழ்வதிலின்பம்
வாய்த்திடவே தந்தவளாம் வாழிய வாழி!

**********************

1 comment:

  1. சிறப்பான பகிர்வு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete