Thursday, October 18, 2012

தளர்வுறும் மனம் தள்ளு

                   தளர்வுறும் மனம் தள்ளு


பெண்:

தேனைத்தான் தந்தேனே காசைத்தான் தாவென்று
தேன்மலர் கேட்டதுண்டோ
வானைத்தான் தந்தேபின் வீசத்தென் றல்தன்னை
வாடகை வான் கேட்குமோ
ஏனத்தான் இப்பூமி எல்லோர்க்கும் ஆனாலும்
இருக்கத்தான் இடமில்லையே
ஊனைத்தா உயிரைத்தா உனதில்லை ஓடிப்போ
உரிமைக்கு நாமென்பதேன்

வாழத்தான் எழுந்தோமே வாளைத்தான் கொண்டெம்மை
வீழத்தான் கொன்றார்களே
நாளைதான் நமக்கென்று நம்பித்தான் இருந்தோமே
நலியத்தான் செய்தார்களே
ஏழைதான் என்றே எம் இயல்பைத்தான் மீறி இவ்
வுலகுந்தான் எதிர் வந்ததே
சூழத்தான் நின்றெம்மை சுற்றித்தான் படைகொண்டு
சொல்லித்தான் கொன்றார்களேன்

உள்ளந்தான் எண்ணித்தான் உரமும்தான் கொண்டாலும்
தன்னைத்தான் புரியாமலே
அள்ளத்தான் குறையாத அன்பைத்தான் கொள்ளாமல்
அறிவற்ற நினைவாகியே
பள்ளந்தான் முடிவென்று பாயுந்தண் ணீராகிப்
பலமாந்தர் நிலைகெட்டுமே
கள்ளந்தான் கொண்டோரைக் காலத்தின் கோலத்தில்
காணும்  இந்நிலையானதேன்

ஆண்:

எண்ணந்தான் தளராதே இன்னும்தான் துணிவுண்டு
எழவுந்தான் உரமுண்டடி
கண்ணைத்தான் போலும்நாம் காத்திட்ட மண்போக
கொள்ளத்தான் திறன்கொள்ளடி
பெண்ணைத்தான் கொன்றாலும் பிள்ளைதான் தின்றாலும்
பிறந்திட்ட தமிழ் எண்ணடி
விண்ணைத்தான் வெளிச்சம் செய் வெயிலும்தான் மேலேறும்
விடியும் வாழ்வுனை நம்படி

1 comment:

  1. /// உள்ளந்தான் எண்ணித்தான் உரமும்தான் கொண்டாலும்
    தன்னைத்தான் புரியாமலே
    அள்ளத்தான் குறையாத அன்பைத்தான் கொள்ளாமல்
    அறிவற்ற நினைவாகியே ///

    அருமையான (வரிகள்) பாடல்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete