Sunday, October 14, 2012

யாரங்கே..!

 நீரினுட் கல்லை எறிந்த பின்னும் - குள
நீரலை தோன்றிடக் காணவில்லை
வாரியிறைத்து மழை பொழிந்தும் -வெள்ளம்
வந்து நிலமோடக் காணவில்லை
போரில் முரசமும் கொட்டியது - எந்தப்
போரிடு வீரனும் காணவில்லை
தேரினில் தெய்வமும் ஏறி நிற்க-  எந்தத்
திக்கிலும் சக்கரம் சுற்றவில்லை

பாரியும் தேடியலைந்து விட்டான் பாவம்
பார்வையில் முல்லைகொடி யுமில்லை
கூரிய அம்புகள் விட்டிருந்தும் - அது
குத்தும் இலக்குகள் ஏதுமில்லை
வேரின் அடியிற் பழுத்த பலா - அதை
வேண்டிக் கவர்ந்திட யாருமில்லை
பாரில் இருள்ஓடிக் காலை வந்தும் - சுடர்
பற்றி யெரிந்திடக் காணவில்லை

ஓடித்திரிந்தே உழைத்தவனும் - வாழ்வில்
ஒன்றுமே செய்யா திருந்தவனும்
ஆடிக் களித்து மகிழ்ந்தவனும் - ஏதும்
ஆகட்டுமென்றே யிருந்தவனும்
கூடிக் கலந்தங்கு வாழ்ந்தவனும்  - எந்த
கூட்டமும் இன்றித் தனித்தவனும்
தேடிடும் ஞானியும் மூடனவன் - இவர்
சேர்ந்து கிடக்குமிப் பூமியிலே

வாடிக்கிடக்குது  தோட்டமொன்று - அங்கு
வண்ண மலர்களோ ஆயிரமாம்
மூடிக் கிடக்குது மேகமொன்று வானம்
முற்றும், மழையின்றிச் சூனியமாம்
ஒடித்திரிந்திவர் வேண்டி நின்றும் அந்த
ஒற்றைக் கண்மட்டும் திறக்கின்றதே
நாடி அருள் செய்வதார் இறையே இங்கு
நாமுள்ளம் வேண்டு மாதி சிவனா

ஓடித்திறக்குது  வாசலொன்று - அங்கு
உள்ளே வருவது நீதியொன்றா
தேடியெடுப்பது ஏடுதானா - அல்ல
தீட்டிய கூருடை வாளினையா
நாடி வருவது நன்மைகளா - அல்ல
நாலு முழக்கொடி காலன்சொத்தா
ஓடித்திரிவது உண்மைகளா - இல்லை
ஒசையற்ற காலச் சக்கரமா?

*******************

1 comment:

  1. வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    முடிவில் நல்ல கேள்வி...

    ReplyDelete