Wednesday, November 14, 2012

குருட்டு உலகமடா !

வாழ ஒருவழி தேடிநின்றோம் அவர்
வஞ்சகர் என்றுரைத்தார்
சூழுந் துயர்கள்பந் தாடிநின்றோ மெங்கள்
தூய்மை அழிப்போ மென்றார்
பாழுங் கொடுமைகள் செய்தவரைப் பழி
கூறுதல் விட்டேயெமைத்
தோளில் உரங்கொண்ட தாலுலகோ கொடுந்
தீயரென்றே உரைத்தார்

பாலைக் குடித்திடப் பிள்ளைபசி கொண்ட
பாங்கொடு நாமழுதால்
நாலை ஐந்து குற்றம் நாமிழைத்தோமென
நஞ்சினைக் கொட்டுகிறார்
காலை விடிந்திடும் சேவல்கூவுமெனக்
காட்சியும்காண நின்றால்
தோலைஉரித்துக் கிடத்தியெமை மெல்லத்
தூள் அள்ளி பூசுகிறார்

சேலை வழுகவைத் தார்சின்ன மாதரைச்
சித்திர வதைசெய்து
காலை எடுத்து மிதித்து அவளுடல்
கொன்று களிப்படைவார்
சாலை வழிபெரும் சீறிடுவாகனம்
சூரப்பயணம் செய்வார்
மேலை வழி  தேசமண் சிவக்கும்
 எங்கள் மெய்யின் குருதிகொள்வார்

ஊருக்குள் வீட்டுக்குள் எங்கும் கொலை என்னும்
உத்தம போதனைகள்
யாருக்கு யார்சொல்லிக் கொண்டனரோ பெரும்
வம்சத்தில் பற்றுடையார்
பேருக்கு ஓர்தமிழ் பிள்ளைதனும் இந்த
பொன்னெழில் நாட்டிலின்றி
வேருக்குள் வெட்டித் தறிப்பதுவே இனி
வேலை நமக்கு என்றார்

யாருக்கு என்ன நடப்பதெல்லாம் ஒரு
யாகமென் றோ உலகு
கூருக்கு தீட்டிய கத்தியினால் வெட்டக்
கூசாமல் கண்டுநின்றார்
மாருக்கு குத்தியும் மண்ணில் விழுந்தழும்
மானிட ரெம்மைவிட்டுப்
போருக்குள் நீதியைக் கொன்ற கயவரை
பூவள்ளி போற்றுகிறார்

தேருக்குள்ளே நின்று வீதியைச் சுற்றிடும்
தெய்வத்தை கேட்டுநின்றோம்
பாருக்குள் தேவரின் மைந்தர்களாய் இந்த
பச்சை யிளமனதும்
நேருக்கு வன்பகை வந்து நின்றா லதை
நீறென ஆக்கும் ‘கனல்’
நீருக்குள் பூத்தகமலமதில் எரி
நெய்கொண்ட தீயின் அழல்

வாரிச் சுருட்டியும் வந்தவர்கள் ஓட
வைக்கும் திறனும் கொண்டார்
பாரின் குருட்டவை பார்க்கத் தவறிய
பாழும் செயல்க ளெல்லாம்
சூரிய னின்கதிர் போலத் தரணியில்
சுட்டெரித்தே தருமம்
நேரிய பண்புடை செய்ய முயன்றவர்
நம்மைப் பிரிந்திடினும்

வீரியம் இல்லையென்றே குனிந்தோடிட
வேளை இது இல்லைடா
காரிய மாற்றிக கருமிருள் போக்கிடக்
கண்களை நீ திறடா
சூரியன் தோன்றிடச் சுற்றுமுலகில்நம்
தேசமதை மீளடா
பாரிய மாற்றமிட்டே பகைவென்றிடப்
பார்த்தொன்று கூடிடடா

****************

1 comment: