Showing posts with label பொதுக்கவிதை. Show all posts
Showing posts with label பொதுக்கவிதை. Show all posts

Sunday, March 17, 2013

சிரித்திரு மகளே


நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
. நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
. சொல்லும் சிரிப்பிதுவோ
ஓலையிடை தென்னங்கீற்றினூடு நிலா
. ஓடிச் சிரித்ததுவோ-மழை
போலும் இளந்தூறல்காண வண்ண வான
. வில்லும் சிரித்ததுவோ

வாழை மரங்களில் வந்துநீளும் குலை
. வைத்த முன் பூவரிசை -அது
தோழமை கொண்டு சிரித்தனவோ- கனி
. தேனைக் குழைத்தனவோ
கீழை வயற்கரை கோபுரவீதியில்
. கூடும் மந்தியினமும் - வந்து
வீழப் பொலிந்த கனிஉண்டு ஆனந்த
. வேளை என்றாடியதோ

பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர்
. பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
. சாய்ந்தே சிரித்தனவோ
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
. பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
. தங்கும் சிரித்ததுவோ

கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
. காணும் பசும் இலைகள் - நெடு
வானமழை விழும்நீர் துளி கொஞ்சிட
. வெட்கிச் சிரித்தனவோ
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களைத்
. தாங்கிச் சிலுசிலிர்த்து - எழி
லான சிறுஓடை மீதுமலர் தூவி
. ஆனந்த மென்கிறதோ

வெள்ளை மணல் மீது வந்துகடலலை
. வீழ்ந்து சிரித்தனவோ -கயல்
துள்ளிக் குளத்திடை தாமரைப்பூ இதழ்
. தொட்டுச்சிரித்ததுவோ
வெள்ளிப் பனி உச்சி ஏறும்கதிர்கண்டு
. வீழ்ந்து சிரித்ததுவோ -சுகம்
அள்ளித்தரும் இளம்தென்றல் சிலிர்ப்பிட
. ஆரத் தழுவியதோ

அத்தனை காணும் சிரிப்பு மியற்கையின்
. அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளோ
. இரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
. பட்டெழில் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச் சிரித்திடு
. அற்புத பூமியிதே

புகழ்போதை

           

புகழ்போதை தனைவெல்லப் புவிமீதிலே
  புதிதாக எது உண்டு சபைஏறியே
நிகழ்கின்ற எதுதானும் தனைமீறியே
  நேரும் வினோதங்கள் கலைமேவியே
அகழ்கின்ற குழியாவும் அவர்மேனியே
  அடங்குமென் றறியாமல் சில பேருமே
திகழ்கின்ற விதிவந்து மனம்கொள்ளவே
  தெரிந்தாலும்குழி தோண்டும் வழியாகுமே

அலைகின்ற திரையேறி அவன் நீந்தினான்
 அழகென்று அலைகண்டு அதனுற் புகுந்தான்
தலைமூழ்க அலையோங்கி வரும்போதினில்
   தனதுயிரின் நிலைகண்டு கரைவேண்டினான்
நிலைகெட்டுத் தடுமாறி அதில்நீந்தவே
    நேரமதில் உருண்டோடும் விதியானது
குலைகின்ற பொழுதெண்ணிக் குறைவாக்குமோ
    கொடிதெண்ணித் தடையிட்டு உயிர்நீக்குமோ

கதியும்பிழைத் துயிர்கொள்ளப் புயல்வீசுமோ
  கைதந்து உயிர்காத்துக் கரைசேர்க்குமோ
நதிகொண்டபூவாக நலிந்தோடியும்
 நிலைகெட்டு விழும்போது நினைந்தேயவன்
புதிதெண்ணி வரும்போது பகைமிஞ்சுமோ
  பொழுதென்ப இருளோடு புகை மிஞ்சுமோ
அதிசீலஒளித் தீயே அருகோடுவா
   அகிலத்தில் அவன்கொள்ளும் அமைதியும்தா

(வேறு)

அண்டம்பொறி பறந்தோட அனல்சிதறி வெடியதிர
ஆக்குவாய் சக்திதேவி
முண்டம்தலை யென்றிணைய முகம்செய்து தமிழ்கொண்டு
மூச்சினையும் ஊதிவைத்தாய்
கண்டம் கடல்கடந்துவந்து கடுங்குளிரி லுழலகலை
யுணர்வுகொண் டெழெவும் வைத்தாய்
தண்டமெது தருவதெனில் தந்தமகு டம்விழவுன்
தகித்திடும் தீயில் இடுவாய்

குண்டெனுருள் கோளங்களும் கூட்டமைத்துக் கோடியெனக்
குதித்தோடச் செய்ததாயே
வண்டெனச்சொல் மதுவார்த்து வாழ்வில்புகழ் போதைதனை
வழிகாட்டி விட்டதேனோ
செண்டினொடு மலராட செய்தவளே கருவண்டு
தீண்டிவிடத் தெருவில்பூவாய்
மண்ணொடுமண் ணாகஎனை மாறிவிடச் செய்ததுவும்
மகிழ்வானால் மறுப்புமுண்டோ

பிச்சையிவன் உடலீந்து பிச்சையென உயிர்வைத்துப்
பிச்சையெனும் வாழ்வீந்த தாய்
இச்சைதனைக் கொண்டெழுந்தும் இயல்பில்கவி பாடிப்புவி
இரந்துதிரி என்றதெவரோ
பச்சையுடல் மீதுயிரைப் படைத்திட்ட தேவி யுனைப்
பாடிவலம் வாஎன்பதால்
அச்சமில்லை என்றவனை அணை என்று கூறியதேன்
அணையல்ல அணையென்பதோ?


காலத்தை வென்றவன்

கலையென்ன மனம்மீது கலைந்தோடவோ
கவியின்பத் தமிழ்நாவிற் கசப்பாகுமோ
இலைஎன்ப தொருசொந்தம் எனவாகுமோ
இதைக் கண்டு விழிமூடி இருஎன்பதோ
மலையென்ற மனம்கொண்ட திடமானது
மண்னாகி உருமாறி மறைந்தோடுமோ
தலையெங்கும் தடுமாற்றம் தலைதூக்குமோ
தவிப்பான தெனைக்கூடித் தரைவீழ்த்துமோ

இடர்வந்து வழிமீது இருந்தாடுமோ
இடம்விட்டு இருள்காணும் திசை செல்லவோ
சுடர் கொண்ட மணிதீபம் புயல் கொள்ளவோ
சுடுமென்று ஒளிகாவா திருள் நிற்பதோ
படர்கின்ற துயர் கண்டு பணிந்தோடவோ
பழகும் நற்துணைகொண்டு விரைந்தேறவோ
அடர்வானில் விரிமேகம் ஒளிமூடுமோ
அடடா என் விதியென்று சுடர் தூங்குமோ

இறைதேவி எனயாளும் ஒளிதீபமே
எனதாசை தமிழோடு இன்னும்வாழவே
கறைபூச எனதன்பு மனம்மீதிலே
கருதாது பகையின்றி உயிர்மேவியே
உறைவாய்நீ உயரன்பில் எனையாளவா
உளம்மீது கொளுமின்பத் தமிழ்மீண்டும்தா
மறை வானில் பெரிதான ஒளி தீபமே
மனப்பூத்துத் தமிழ்பாடும் மறுவாழ்வுதா!

பொங்கல் வராதோ?

         

பொங்கலும் உண்டேன் இனிக்கவில்லை - சில
பூவள்ளிப் போட்டேன் மணக்கவில்லை
தெங்கின் அருகிடை தோன்றும்கதிர் - இன்று
தேசு கொண்டுவீசக் காணவில்லை
செங்கரும்புண்ணச் சுவைக்கவில்லை - ஒளி
சோதி விளக்கேற்ற நிற்கவில்லை
மங்கும் பொழுதென்னும் தீரவில்லை - சில
மேகம் மறைக்குது வெய்யிலில்லை

வண்ண மலர் காலை பூக்கவில்லை = அதில்
வாசமெழக் காத்தேன் வீசவில்லை
கொண்டு வரும் தென்றல் கூடவில்லை  - இன்று
கூவும் சேவல் குரல் கேட்கவில்லை
மண்ணில் உதயத்தைக் காணவில்லை - கோவில்
மங்கல ஓசை மணிகளில்லை
பண்பாடு மீண்டும் தளைத்ததொரு - பொங்கல்
பாரில் விளைந்திட ஏதுசெய்வேன்

பாயும் சுருட்டியுள் வைக்கவில்லை - இந்தப்
பாழும் தூக்கம் விழி நீங்கவில்லை
தேயும் நிலாவென்ற தென்பு நிலை - எந்தத்
திக்கிலும் பாதை தெரியவில்லை
நேயம் நேர்மை எங்கள் பக்கமில்லை - எந்த
நீதியும் ஓசை மணிகளில்லை
காயும் வயலிடைநீருமில்லை - என்ன
காரணமோ பதர் நெல்லுமில்லை

கண்கள் விழித்து கடிதெழுந்து - உடல்
காணும் சோம்பல்தனும் மெய்முறித்தே
எண்ணத்தில் தீயிட்டுப் பானைவைத்தும் - அதில்
ஒற்றுமைச் சர்க்கரை ஊற்றிவைத்து
மண்ணையும் மாகதிர் வெய்யவனை - எண்ணி
மங்கலபாடல் முழங்கியொரு
வண்ணப் புதுபொங்கல் செய்வதெப்போ - அதை
வாயில் வைத்துசுவை கொள்வதெப்போ ?

அரசனா? ஆண்டியா?

ஆண்டுபோய் ஆண்டொன்று சேரும் - இந்த
ஆனந்த வான் வண்ணமாகும்
மூண்டு தீ வானிடைஓடும் - அது
மூவர்ணமாய் ஒளிபூக்கும்
ஆண்டவன் ஆளுவன் யாரும் - என்ன
ஆனாலும்ஆணவம் மங்கா
தீண்டும் வாள் தேகங்கள் கேட்கும் - அது
தித்திப்பை இரத்தத்தில் காணும்

ஆண்டிகள் போல்மொழி மேன்மை - இனம்
அங்கென்றும் இங்கொன்றும் ஓடும்
வேண்டிப் பிழைப்பதை நாடும் - ராஜ
வீரம் சலித்த தென்றோடும்
ஆண்ட பரம்பரை மீண்டும் - ஆளும்
ஆசைகுன்றிச் சோம்பல் கொள்ளும்
வேண்டா மென்றெதள்ளி ஓடும் - என்ன
வேதனையில் இன்பங் கொள்ளும்

ஆண்டவன் என்செய்யக் கூடும் - அந்த
ஆறாம் எண்ணம் கெட்டதாகும்
மீண்டுமிவர் சக்தி மேன்மை - பெற
மேதினியில் வாழ்வுமிஞ்சும்
தீண்டாது புத்தியை மூடி - இது
தேவை யில்லை என்றுவீசி
வேண்டா தென்றே கூனிநின்றால் - என்ன
வேதனைதான் மீதியன்றோ

தோண்டப் பொருள்வரு மென்றும் - பொன்
தோட்டதில் காய்கொள்ளும் என்றும்
நோண்டிக் கூரைதனைப் பிய்த்தே - ஒரு
நாளில் கொட்டும்பணம் என்றும்
ஆண்டாண்டு எண்ணிக் களித்து ஆவர்
ஆயுள் முடியும் வரைக்கும்
பூண்டாகிப் புல்லாகி தேய்ந்தும் இவர்
புத்தி கெட்ட வாழ்வே மிஞ்சும்


**********

Thursday, March 14, 2013

காதல் வெறுப்பு

நீர்வார்த்து நீரினிடை நெளிந்தோடவும்
  நீந்துகயல் நெளியலையும் உருவாக்கினாள்
பார் செய்து பரந்தவெண் பனிமலைகளும், 
   பட்ட கதிரா லு
ருகி வீழும்நதி
நேர் நிற்க வெயிலோடு நிழல் மரங்களும்

   நீள் வானம் நீந்துமெழில் மேகங்களும்
சீர்ஆக்கி உலகமைத்து சிலமாந்தரும்
  செய்தவரை வாழென்றே சிரித்துநின்றாள்


யாராக்கி மனிதமதில் அறிவையீந்து
  ஆணாக்கிப் பெண்ணாக்கி அவர்சேரவும
பேராக்கி அன்னையொடு  பிள்ளையென்றும்
  பெற்றவரில் தந்தையும் உருவாக்கினாள்
கூராக்கி மனங்கொள்ள உணர்வீந்தவள்
  குருதி தசைஎன்புடனே கூட்டி வைத்தாள்
தேராக்கி வாழ்வுதனை தினமோடென
  தேகமதில் உணர்வோடு உயிரையீந்தாள்


விண்ணாக்கி விண்ணிறைந்த கோள்களாக்கி
  விளையாடி அசைக்கின்ற \சக்தி தேவி
ஆண்காணப் பெண்ணழகு, அன்பினோடு
  அறிவீந்தும் அதைமீற உணர்வு தந்து

கண்ணாக்கி கன்னியிடம் காதலெனும்
  கருவாக்கிப் பொருளாக்கிக் கனவாக்கியும்
மண்ணாகப் போகுமுடல் மதன் வீசிடும்

   மலர்க்கணைபட் டுள்ளமும் மயங்கவைத்தாள்

வானாக்கி வெளியாக்கி விண்மீன்களும்
  வண்ணமதி விளையாட வழிசெய்தவள்
தேனாக்கி தேன்மலரில் சுவையாக்கியும் 
  செய்தபின்னே தேவையென வண்டாக்கினாள்
தானாக்கி மனித உடல் தன்னிலிச்சை
   தனையாக்கி குலமாக்க விதியும் செய்தாள்
ஏனாக்கிவைத்த இந்த இயற்கை யீர்ப்பை
   இழிவென்று இயம்பி இதைத் தள்ளலாமோ


இறைநோக்கம், இருவர் மனம் ஒன்றாகுதல்
  இளைமைதனும் தாய்மையின் ஏதுவானால்
கறைகொண்ட உணர்வென்று கருதலாமோ
  காதல் பெருந் தவறென்று தள்ளலாமோ
குறை காணின் இறைதானும் குறைசெய்யுமோ
  குற்றமவள் குணமென்று விதிசெய்வதோ
நிறைவற்ற எண்ணமென விரல்நீட்டினால்
  நீயென்று தீயள்ளி பொசுக்கிடாதோ


ஆதலினால் காதலினைச் செய்வீரென
  அகிலமதில் யானுரைக்க வில்லையையா
காதலென்ப குற்றமெனக் கருதவேண்டாம்
  கருணையுடன் நோக்குங்கள் காதலர்களை
பாதகமே யில்லாது பறந்து வானில்

   பறவைபோ லிருவரையும் மிதக்கவைத்து
நாதயிசை மாலையணி தோளாராக்கி

   நல்லதொரு வாழ்வீந்து மகிழுவீரே!

Tuesday, March 12, 2013

வாழும் வாழ்வு !


நல்ல மனங்களிள் அன்புக் கோவில்கட்டி
ஆண்டவன் வாழுகிறான் - அவன்
சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை
என்றுமே கொள்ளுகிறான்
எல்லை வகுத்தவர் அல்லல்தனை நீக்கி
ஓங்கிடச் செய்யுமவன் - மனம்
கல்லை நிகர்த்தவர் கொள்ளும் இதயங்கள்
மெல்ல உருக்கிடுவார்

கண்ணைத் திறக்கினும் காணுபவை வெறும்
காட்சி கனவுகளே -  இந்த
மண்ணில் நடந்திடும் மாய விநோதங்கள்
மர்மக் கதை யெனவே
எண்ண மென்பதென்ன  எத்தனை பேய்களின்
இன்பச் சுடுகாடு  - நெற்றி
கண்ணனவன் நட மாடிக்கழிக் கும்வெண்
சாம்பல் கொள்ளும்மேடு

அள்ளிக் கொண்டுசெல்ல ஏதுமில்லை நாமும்
அந்த மென்றாகையிலே - ஒரு
வெள்ளிக் கதிரொளி ,வெற்றிடம், சூழிருள்
வேறொன் றிருப்ப தில்லை - யாவும்
துள்ளித் திரிகின்ற பொன்னெழில்வாழ்வினில்
தேடும் பொன்செல்வங்களும் - பதில்
அள்ளியெடுத்திட வந்துவிழுவது
ஆகத்துயர் அழிவே

தொல்லை தரும்விதி கொண்டவாழ்வுமிது
தூய்மையில் மாயைகளாம் - நாமும்
இல்லைஎனப் புவி நீங்கிய பின்னரே
உண்மையைக் காண்பதுண்டோ
சொல்லிலே தன்னலம் எண்ணும் மனம்விலங்
குள்ளபெருங் காடு -  இவை
அல்லதென்றாகியும் மற்றவர்  போற்றுவர்
ஆகா எழில் வாழ்வு

மங்கல ரூபி

மங்கல ரூபசு கந்தினி மாதே மலைமகளே
சங்கு முழங்கிய தாலும் பெரும்புகழ் தந்தவளே
செங்குல மீது சொரிந்தகுறை தன்னைச் சீர்செயவே
எங்கும் மொளிர்ந்திடு வண்ண முயர்சுடர் ஏற்றிவிடு

இங்கு குளிர்தர இன்பமெனும் முகில் வந்திடுவாய்
சங்கரனின் கொடுவெங் கதிரில் மனம் கொண்டுமொரு
பொங்கி நடம் செயப் புன்மை யழிந்திடச் செய்ததென
பங்கம் விளைத்தவன் பாதம் வணங்கிடச் செய்துவிடு

சிங்கம் தனிற் தினம் எங்கும் புகுந்திடச் செய்பவளே
எங்கள் உளம் வரை வந்து பிழைகளும் கொல்பவளே
 தங்கமெனும் மனம் கொண்டெமை வெல்லும் சங்கரியே
இங்கிவர் ஏழை உளந்தனைக் காத்திட வருவாயோ

மங்கு மிருள் எனும் மாயை மறைந்திடக் காணுவதாய்
கங்கை கொளும்பெரு வெள்ளமதில் பழி கழுவியொரு
எங்கும் நிறை ந்திட ஊதிய சங்கு மொலித்துவர
மங்கல மாயிவன் கண்களிலே சக்தி தந்து விடு

சோர்வு வேண்டாம்

(வேலைதேடிக் களைத்துச் சோர்ந்த மகனுக்கு தந்தை கூறுவதாக...)

காலமோடிச் செல்லும்போது
.....காணும் வாழ்வில் மாற்றமுண்டு
.....கண்ணில்நீரும் கொண்டதேனோ மகனே
நீலவானிற் தேயுஞ் சந்திரன்
.....நேரம்வந்த போதுமீண்டும்
.....நேர்வளர்ந்து வட்டமாகும் முகமே
கோலமுந்தன் சின்ன உள்ளம்
.....கொண்டதென்ன? பூவும்வாடிக்
.....கீழ்விழுந்தபோது காணும்சோர்வும்
நாலும் நன்மை தீமை என்று
.....நாமும் கொண்டவாழ்விலின்று
.....நீயுமெண்ணிக்  கீழ்கிடப்பதேது

காகம் ஓடும் மேகமீதில்
.....காலைவேலை செய்வென்று
.....காததூரம் செல்வதுண்டோ கூறு
தாகமென்று  கீழிறங்கித்
.....தாவென்றெங்கும் காசுகொண்டு
.....தண்ணீர்கேட்டுத் திரிவதுண்டோகூறு
ஆக இந்தமனிதன்வாழ
.....ஆனசட்டம் நீதியேதும்
.....ஆண்டவன் வகுத்தல்லப் பாரு
தேகம்சாக வெட்டிகொல்லும்
.....தீய நெஞ்ச மாந்தர்தானே
.....தேவைஎன்று சட்டம் போட்டதுண்டு

தான்சுழன்றே ஓடும்பூமி
.....தன்னில் வாழ்வு பொய்யின்போர்வை
.....நீயும்கொண்ட துக்கம்விட்டுநில்லு
ஏன் பயந்து கைகள்கட்டி
.....இங்கும் அங்கும் ஓடியாடி
.....இம்சை கொள்ளும் வாழ்வை விட்டுதள்ளு
நான் என்றெண்ணி ஏர்பிடித்து
.....நல்லபூமி நெல்விதைத்து
.....நாட்டில் ஏற்றம் கொள்ளும் வேலைபாரு

Monday, March 11, 2013

புகழ்

உளமலர் விரிந்தொளி பெறுகுது பெறுகுது
உவமையும் எதுவில்லையே
தளம்பிடுங் குளஅலை தவித்திடு மழகுடன்
திகழ்வது மனவுணர்வே
மளமள வெனவரு மழையெனும் புகழ்மொழி
மகிழ்வினைத் தரசுகமே
விழவிழ மலர்களில் வழிநெடு நடையிடும்
விதமெனச் சிலிர்த்திடுமே

குளஅலை களில்முகம் தெரிந்திடும் வகைமனம்
குதித்திடும் புகழ்ச்சியிலே
நிழலது முகில்வர நிலமிடை அழிந்திடும்
நிலை யெனப் புகழ் கெடுமே
இளமன திடை வரும் கனவுகள் என இவை
இருந்திடும் வாழ்வெனிலும்
அழவென வருவது தொகைதொகை மகிழ்வென
அடைவது சிறிதல்லவோ

புகழ் தரும் உணர்வுகள் பெரிதுவ கையுமெழ
புரிவது புதுச் சுகமே
நிகழ்வது சரியெனில் நெறியெழும் புகழ்பெரு
நிலவெனும் குளிர் சுகமே
பகலவன் ஒளியென பரவிடும் இருள்மறை
பனிவிடும் புல்லெனவே
அகமிடை -இருளற அதியுயர் தகவுற
அடைவது பெருமகிழ்வே

மழைதரு முகிலென மனமதில் கனமெழ
மதுவென இனித்திடிலும்
உளதினி மையில்பொலி வுறயுத விடுமிதில்
உருகிடும் மனம்பெரிதே
துளையிடு குழலிடை நுழைவளி இசைஇடும்
நிகரென வரும் புகழோ
வளர்ம்தி முகமதில் வரும்மகிழ் வுறப்புகழ்
தனையெடு மருந்தெனவே

Friday, March 8, 2013

மறுக்காதே தாயே!

          
களிமிகு புவியிடை கருவென வுயிர்தரு
கருணையே வருவாயோ
அளிபல அமுதெனு மருஞ்சுவை தமிழிசை
அகமெழ வருளாயோ
துளிபல உதிர்வெடு கடுமழை எனமனம்
தமிழ்பொழிந் திடத்தாயே
எளிதென மனமுயர் இசைகவி பலவெழும்
இதயமும் தாராயோ

புவியசைந் திடுமதைப் பு[ரிந்திடும் உணர்வினைப்
பொழுதுளம் இழந்தாலும்
செவியினி தமிழ்சொலும் .திறமெடு தகமையைச்
சிறுமதி புரியாது
கவினுறு மலர்தன்னும் கனிபிழி சுவைமது
கொளும்நிலை மறந்தாகி
ரவியெழ ஒளிவரத் தனைமறந் தொழுகிடும்
இனிமலரென வெனைச்செய்

குழிவிழ குறுகிட குவயலம் தனிலுள
கொடுமைகள் எதுகொளினும்
அழியென கவிமனம் அடங்கிட புரிசெயல்
அரிதெனும் பெருங்கேடாம்
பொழிலுடை எழில்மலர் பிடுங்கியே தரையிடும்
பிழைதனைப் போற்றாது
தொழிலதை விடுஅருந் துயர்களை மனமெடு
துணையிரு தமிழ்த்தாயே

மொழிசொல மனதினில் முழுதென உயிர்திட
மொடுநிலை வளர்ந்தோங்க
கழிஎன குறியிடுங் கணிதமென் றுயிர்கொளும்
கடமையும் சரியாமோ
ஒழிஎன முடிவினை உயரெனக் கருதிடல்
ஒருமுறை விடுதாயே
பழிஎனப் பழமையின் தவறெதும் நினைந்திவன்
பயில்கலை மறுக்காதே

ஏங்குதோ உள்ளம்

நில்லாது ஆறோடும் நில்லாதே என்றதனை
சொல்லாத போதுமது சுற்றியோடும்
செல்லாத இடமெங்கும் சுற்றிவரும் பூங்காற்று
சேறோடு சாக்கடையின் நாற்றம்கொள்ளும்
கல்லாத மதிபோலும் கர்வமெனும் விஷம்பூசிக்
காடையரின் அரசோங்கும் கண்கள் தோண்டி
கொல்லாது கொல்பவரும் கூடியமை இராச்சியத்தில்
இல்லாத பதவிக்கு ஏங்கும் நெஞ்சம்

வெல்லாது அறம்தேய, விடியாது இருள்சூழ
விளக்கொன்றாய் புயல்காற்றில் வைதததீபம்
செல்லாத காசுக்கு  சென்றுமனம் தடுமாறும்
சீரான பொய்மைக்கு சிரசும்தாளும்
வல்லாதி வல்லரென வம்சங்கள் என்று மகா
வாள்கொண்டு அகிம்சைதனை வளர்போம் என்றால்
இல்லாத நாற்காலி அறிந்துமோர் நிழலான
இருக்குமா சனத்திற்கு ஏங்கும் உள்ளம்

பல்லாதி மன்னர்களில் பசுவுக்கு நீதிசொல்ல
பிள்ளை தனைத்தேரிட்டும் பாசம்கொண்டு
முல்லைக்குத் தேரீந்தோன் மூதாட்டி ஔவைக்கு
மேலும்வாழ் வென்றெண்ணி தானும் கொண்ட
நெல்லிக்கனி யீந்தவரும் நீதிதனைக் காணுமென
நிகழ்த்திநல் கதைபடித்தும் நெஞ்சம்தன்னை
இல்லாது நீதிக்கு இழுக்கேற்று நாற்காலி
இருந்தாலே போதுமென இச்சை கொண்டார்

நெல்லுயர கோனுயர்வன் நீதிபல நெறிகளையும்
நிச்சமாய் இவர்கற்ற நெறிகளாயின்
கல்லாலே மாங்காயைக்  கனியென்றுஅடிப்பவர்செங்
கோல்கொண்டு சிரசுதனை குறித்துவீசி
நில்லாது கழுத்திருந்து  நீக்குஎன ஆட்சிவிதி
நேரெழுதி தமிழ்சாய்த்து நிற்போர்பக்கம்
பொல்லாத ஆசையுடன் புறத்தோடி இரந்தவரை
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ

Thursday, March 7, 2013

எது காக்குமோ?

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலேசொல்
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனாலலே
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோஉன்
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேர்ந்திங்கு
   பலமோடு வழி காணீரேல்

தெளிவான பெருவானிற் திகழ்கின்ற மதிகூட
    தெரியாது பிறை யாகலாம்
வளிகொள்ள இணைகின்ற நறுவாச மலர்தானும்
   வடிவின்றி நிலம் வீழலாம்
களிகூடித் திரிகின்ற ஒளிவானின் முகிலோடி
  கதியின்றித் தொலைபோகலாம்
எளியோரி னுயிரோடு விளையாடு மிவந்தன்னை
    எதுவந்து தனதென்குமோ

பெரிதாகிப் பிளவாகி நிலமான பிரிந்தோடி
    வருவாயென் மகனென்னுமோ  
தெரியாத இரவோடு எழுமாழி உருண்டோடி
     தவழாயென் மடியென்குமோ
சரியாத மலையுச்சி சரமாரி தீபொங்கி
  சடசடத் துதிர் வாயிலோ
புரியாத தொருகுற்றம் பிறிதென்று யினியில்லை
  புகுவா யென்மகன் என்னுமோ
 
ஒருநாளில் கனவோடு  உறவாடும் மன எண்ணம்
   உயிர்கொண்ட தெனமாறுமோ
திருநாளும் பகலாகித் தெரிகின்ற ஒளிபோலத்
  தேயாமல்  நிலவோடுமோ
அருகாமை கொடியொன்று அலைந்தாடிமகிழ்வோடு
   அடடா என்றொலி கூட்டுமோ
பெருகாதோ ஒன்றாகிப் பிறந்தோமே அழகென்று
  புதிதாய்நல் வழிகாண்பமோ

கருகாதோ அருகாதோ கறை கொண்ட தினம்மாறிக்
    கரும்பெனும் வாழ்வாகுமோ
வருமாமோ மகிழ்வோடு வளைசங்கின் துளையூடே
    விளைகின்ற ஒலி கேட்குமோ
உருமாறிக் கருமாறி உலகத்தில்  வாழ்வேங்கும்
    இளையோரை யினி காப்பமோ
பெருமாரி இரவோடு பிரளயம் செய் தாயே,
    புகு நாட்டில் புரள் தீமைகொல்!

Thursday, February 14, 2013

என்நாடு போல வருமா?

பனிதூங்கு மிலையாடப் படர்காற்றில் குளிர்மேவப்
பெரும்போர்வை கொளும் நாடிதே
இனிதான தமிழோசை எழுங்காலைப் பொழுதெங்கே
இடி மேகம் இசைகீதமே
குனிந்தெங்கள் நடைமாறிக் குணம் மாறிக் குரல்மாறி
கொளவென்று விதிகூறுதே
இனியென்று மனதாசை இன்பங்கள் பொலிகின்ற
எழில்நாட்டைக் கண்காண்பதோ

கனிதூங்கு மாவின்கிளி கலகலத் தோடு மணில்
கிளை தூங்கி மந்தி யாடும்
நுனி தாங்கி நெல்முதிர நிலம் நோக்கு வயற்கதிரும்
நிமிர் வானம் தொடுமாலயம்,
புனை பானை நிரைக ளயல் புதுவாழை கனியழகும்
பேச்சினொலி தமிழ்நயந்து
நனைந்தாடு தாமரைகள் நங்கை மதிமுகம்போலும்
நளினமிவை காண்பதெப்போ

இலைமீது தனைமோதி எழுந்தோடி வருங்காற்று
இன்பவரு டலின்போதையும்
கலைவண்ண நடமாடும் கண்கவருந் தோகையொடு
காயும் புகை யிலைவாசமும்
அலையோடு குளக்காற்று ஆலமரத்தடி, கோவில்
அயலுள்ள பெட்டிக்கடையும்
இலையென்ற வாழ்வாகி இருந்திங்கே என்பாடு
எனதாகு மேமாற்றமே

பனை உரசல் சர்ரென்று பழம்வீழ அணிலோட
பயந்தோடும் குருவி கூச்சல்
தனியாகக் குயிலொன்று தருமீது துணையின்றித்
தருமோசை துயர் கீதமும்
மனையோடு ஒருவேம்பு மாதுளையும் கமுகென்று
மனம் பொங்கு மெழிற்காட்சிகள்
இவைகாணா தொருவாழ்வும் இருந்தென்னபோயென்ன
எனமனது அலைந்தோடுதே

நீள்சாலை நிலம்கீழே நெடிதோடும் வண்டிகளும்
நிழல் மரங்கள் அற்றபாதை
தோள் மாறித் திடமற்ற துணிவழிந்த கோலமுடன்
தோல்வி மனம் தொய்ந்ததான
வாழ்வுணர்வு என்றாகி வண்ணங் கரு காக்கைநிறம்
வகையேனோ தோலென்றெண்ணி
நாளென்ன பொழுதென்ன நலமாயி னுளம்காணும்
நலிவு மிகுந்தேங்கும் வாழ்வே!

Tuesday, February 12, 2013

நல்லமுதம்


சொல்லத்தெரியவில்லை - இந்த
. சுந்தர ரூபபொற் சிங்காரக் கோட்டையில்
. சொர்க்க மிருக்கும்நிலை
மெல்லவிரியு மெல்லை - எந்தன்
. மேகம்மறை நிலவான மனந்தனில்
. மீண்டு மொளிக் கலவை
நல்ல மலர்கள்தனை - இந்த
. நானிலம் மீதிற்சொரி கிறதே,யெழில்
. நந்தவனத் தினிடை
செல்லப் பிறந்த இசை - அன்புச்
. சிந்தனை வானத்து தென்றலெடுத் தென்னில்
. தந்தது போதை தனை

கல்லு முருகும் கலை - இந்தக்
. கன்னித் தமிழ்நிலாக் கற்பனை விண்ணிலே
. காயுமொளிக் குளுமை
வெல்லம் குழைத்தினிமை  - அதை
. வேரிற் பழுத்த பலாவின் கனிச்சுளை
. வெட்டி குழைத்தமுதை
நல்லினித் தேன்கலந்தே - அது
. நாவிலினித்திடப் போதுமோவென்றிட
. நாலாறு கற்கண்டினை
மெல்ல இட்டுக் கலந்தே - இந்த
. மேன்மை யொளிக் கதிர் மிஞ்சும் அவைதனில்
. மென்றிடத் தந்த நிலை!

Sunday, February 10, 2013

கவிதைச் சோலை

பொழிலலை தளும்பிய பொழிதினி லிதழுடை
புதுமலரென மனமும்
எழிலுற அலைதென்ற லிளமல ரழைந்தென
இதமுட னெவர்முதுகும்
வழிசெலும் பொழுதிடை வருடிய சுகமெழ
விழி கிறங்கிய வகையும்
மொழிதமிழ் கவிதைகள் முழுதெனப் புனைகவி
மிகுமிட மிதுவெனவோ

கருவிடை யுயிர்தரு கடவுளு மருள்சொரி
கலைபயி லறிவகமோ
குருவிடை பயிலெனக் குறுஅறி வுடனிரு
கலைமகன் அறிவெழுமோ
தருபலகனிகளும் தலைநிலம் விழுதென
திகழ்பெருந் தருவிதுவோ
பெருமள கவிதரு புலமையில் இணைதொலை
பலகையும் இதுவெனவோ

மெருகிடக் கலைமகள் வருவளோ கமலவெண்
மலர்தனும் இதிலுளதோ
முருகெனு மிளையவன் முதுமைகொ ளறிவினன்
மகிழ்வுற எழுஞ்சபையோ
பருகிட மதுவிழும் பலவண்ண நறுமணம்
படர்விழை மலர்வனமோ
வருபவ ரெவர்தனும் வளமுறத் தகமையை
வழங்கிடு மரசவையோ

அறிவினிற் பலமின்னு மகமிடை கருகொளும்
அதிசயத் திருவிடமோ
பிறிதில்லை மலையிடை பெருகிடு மருவியின்
புனலுதிர் பரவசமோ
பொறியெழ அனலுடை பெருவெளிகொதி யழல்
பரவிய வலிமையதோ
அறமெழ மனதினில் அழகுறுங் கவிபொலி
அமுதளி சுரபியிதோ

Saturday, February 9, 2013

காதலைத்தேடும் உள்ளம்

நானும்தான் எண்ணி நடக்கிறேன் நெஞ்சமோ
நாணமின்றி நடந்தே
தேனும்தான் என்றொரு சேதிசொல்லி யென்னைத்
தீயினுள் தள்ளுவதேன்
வானும்தான் ஏறிக் கடக்க நினைக்கிறேன்
வாலொன்று தான் முளைத்து
வீணும்தான் தொற்று கிளகளில் துள்ளென
வானர மாக்குவதேன்

நானும்தான் கெட்டே யுழன்று வறுமையில்
நாற்றம் எடுக்கையிலும்
ஏனும்தான் உண்ணும் உணவில் அறுசுவை
ஊற்றடி யென்கிறதே
மீனும்தான் போல்விழி மாதர் நிலாமுகம்
மோகம் விளைப்பது ஏன்
தானும்தான் எண்ணித் தலைவியை சேரெனத்
தாகம் மெடுக்கிறதே

மானம்தான் என்றெண்ணிமங்கை மறந்தங்கு
மாலையில் சோலைவர
மேனகையோ இவள் முன்னே நடமிட
மௌனம் கலைக்கிறதே
மானும்தான் துள்ளுது மாது இவள்கண்டு
மாமனம் துள்ளுவதேன்
ஊனும்தான் எண்ணி உருகுவதேன் இந்த
உள்ளம் துடிப்பது ஏன்

ஏனோதான் எந்தனின் எண்ணம் நிறைமனம்
இரட்டை இறகுகட்டி
தானும்தான் எட்டா இடமெங்கும் தாவிட
தாகம் எடுப்பது ஏன்
காணும்தா னென்றிரு கண்களைமூடிக்
கலைஎன்று காத்திருக்க
காணும்தன் சொப்பனம் கற்பனையில்ஒரு
காதலென் றாவதுமேன்

நீரும்தான் பற்றி நெருப் பெழுதே அது
நின்றிட ஏதுசெய்வேன்
கூரும்தான் கெட்டது கொண்ட வாளைவீச
கால்களில் வீழுவதேன்
யாரும்தான் சொல்லத் தெரியாவிடை கொண்டு
ஏனோ வினவுதலேன்
பாரும்தன் என்றிடக் கொண்டவள் சக்தியைப்
பார்த்திதைக் கேட்டனன் ஏன்?

Thursday, January 24, 2013

சிரிப்பொலி (புதிது)


வானெழுந்த வெயில் சிரிக்கும் .  வண்ணமலர் புன்னகைக்கும்
.  வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைவயற் கதிர்சிரிக்கும்   சிற்றோடை கிளுகிளுக்கும்
.  சேர்ந்துவளர் செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானகத்துப் புள்ளினங்கள் .  காற்றொலியில் கூச்சலிடும்
.  காட்டினிலே வண்டுமலர் கண்டு சிரிக்கும்
மானமிழந் தோனைஉயர் .  மாபுகழோன் கேலிசெய்ய
.  மாறும்விதி மாற்றிவிட்டு வீழ்ந்து சிரிக்கும்

தேன்குடித்து மந்தியினம் .  துள்ளி இளித்தாடிவிழும்
.  துயருறுவோன் வாழ்வுகண்டு துறவி சிரிப்பான்
போனவனைக் காட்டினிலே . போட்டெரித்து மீண்டவனும்
, போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்
மான்விழியில் மைந்தர்குலம் .  மருள்வுகண்டு சிரித்திருக்க
.  மங்கையவள் மனதிலென்ன எண்ணி நகைப்பாள்
கூன்விழுந்த பாட்டிமனம் .  குமரியெழில் பார்திளமை                                  
.  கொண்டதிமிர் எண்ணி நிலைகண்டு சிரிப்பாள்

நீரோடும் நதி குதித்து . நெளிந்து மெல வளைந்துசெல்ல
.  நளினமுடன் கரைஅலைகள் நாளும் சிரிக்கும்
பேரோடு பூமியிலே .  பேரரிய வீரமிட்டோன்
.  பெண்மொழிக்கு தோற்றுவிடப் பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே .  ஒருவனாகத் தனித்திருக்க
.  உண்மைவழி நின்றிடினும்  உலகம் சிரிக்கும்
யாரோடிச் சென்றிடினும் .  வாழ்வோடி முந்த அதைப்
.  போராட எண்ண விதி புன்னகை பூக்கும்

தானோடிச் சுற்றுலகு .  தாங்கும்சிறு மானிடனோ
.  தன்னுடைமை பூமிஎன தரணி சிரிக்கும்
வீணாகத் உயிரெடுத்து .  வீதியிலே சாகுமினம்
  வெறிபிடித்த நிலைமை கண்டு பேய்கள் சிரிக்கும்
தானமிடும் குணமகனைத் .  தரமறுப்போன் கேலிசெய்ய
.  தாவணிப்பெண் இருவர்கூடச் சிரிப்பொலி கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவரும் .  விதியறிந்து நகைபுரிய
.  தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்

கண்டதும் காணாததும்

ஒன்று சேர்!
(ஒருவன்)
தேனூற்றும் மலர் கண்டேன் திங்கள் கண்டேன்
தினந்தோறும் வாசமிடும் தென்றல் கொண்டேன்
வானேறும் வெயில் கண்டேன் வானில்தூரம்
வளைந்தோடும் பறவைகளின் கூட்டம்கண்டேன்
தானூற்றி வீழ்ந்தருவி தெறிக்கக் கண்டேன்
தரைமீது விளையாடும் மானைக் கண்டேன்
பூநாற்றம் கொண்ட மலர்ச் சோலையெங்கும்
புதுமை யெழில் பொன்நிலவில் மின்னக் கண்டேன்

(இன்னொருவன்)
பன்சிலிர்த்த உணர்வோங்கும் மனங்கள் காணேன்
பனிதூங்கும் குளிர்வண்ணப் பேச்சைக் காணேன்
தென்னைதொடு இளங்காற்றின் சுகத்தைக்காணேன்
தித்திக்கும் செங்கரும்பில் இனிப்பைக் காணேன்
என்னசுகம் இதுவோஎன் றேங்கக் காணேன்
இசைக்கு மோர் இருள் வண்ணக் குயிலைக் காணேன்
அன்னஅசை செந்தமிழின் அழைக்கு மோசை
அடடா அங்கில்லை முழு நிசப்தங் கண்டேன்

(மூன்றாமவன்)
மின்னுகின்ற விண்மீன்கள் துடிப்பைக்கண்டேன்
மேகமெலாம் கலைந்தோடி அஞ்சக் கண்டேன்
செந்தணலும் நீர்பட்டு தணியக் கண்டேன்
சேதிசொலும் முரசங்கள் உறங்கக் கண்டேன்
சந்தமின்றி சொற்கவிதை சரங்கள் போலும்
சற்றுமிழையா மனிதர்வாழ்வைக் கண்டேன்
மன்னர் பரி வாரங்களும் மறையக் கண்டேன்
மாதவளின் புன்னகையில் துயரைக் கண்டேன்

(பொது)
சொன்னநிலை மாற்றிடவே சிந்தை கொள்வீர்
சோதிபலங் கொண்டுகிழக் கெழுதல் காண்பீர்
பொன்னிறத்து கதிர் வயலில் பொலியக்காண்பீர்
புதுவெள்ளம் பிரவகித்துப் புரளக் காண்பீர்
தென்னைமர இளங்கிளிகள்  சோலையெங்கும்
தாவியெழுந் தோடிமகிழ்வாடக் காணீர்
என்னவென மாந்தர் மனம் வியந்தேயின்பம்
ஏற்றமுறும் வாழ்வுதனை எடுக்கக் காண்பீர்

விண்ணிறைந்து தாரகைகள் விழிக்கக் காண்பீர்
வெண்ணிலவு முழுவட்டம் விளங்கக் காண்பீர்
கண்ணெதிரில் பொன்மணிகள் குவிதல் காண்பீர்
கனவிலன்றி பகைபணிந்து போகக் காண்பீர்
பெண்கள் மலர் தூவிஎழில் போற்றக் காண்பீர்
பெரும் உயர்வில் கொடிஒன்று பறக்கக் காண்பீர்
மண்ணிலெழில் நல்வளங்கள் மீளக் காண்பீர்
மாசற்ற வாழ்வு கொள்ள மாந்தர் சேர்வீர் !

வாழ் வும் தமிழும்


கடித்தேன் இனித்தேன் கனிகள் சுவைத்தேன்
கனிந்தேன் உள்ளம் களிப்புற்றேன்
படித்தேன் பலதும் பழத்தேன் தமிழைப்
பருகும் கள்ளுண் வண்டானேன்
குடித்தேன் கவிதை குளித்தேன் தமிழாம்
குலவும் தென்றல் குளிர்மேவத்
துடித்தேன் இதயம் தொலைத்தேன் தமிழின்
தொன்மை படைப்பில் இழந்திட்டேன்

அடித்தேன் அழித்தேன் எனவேஇல்லா
அழகிற் தென்னை அருகில்தேன்
வடித்தே ஒளிரும் வண்ணநிலாவின்
வகையாய் பிறைபோல் வளர்ந்திட்டேன்
வெடித்தேன் முகிழ்ந்தேன் மலர்ந்தேன் என்னும்
விடியல் பூவில் விளையும்தேன்
விடத்தேன் சுவைதான் எடுத்தேன் இயல்போ
எனத்தான் வியந்தேன் இணைந்திட்டேன்

குடித்தேன் குடமாய் கவிதை யின்பம்
கொள்ளா தேனோ சலிப்பற்றேன்
அடித்தேன் இனிப்பாம் கரும்பில் காணும்
அருந்தேன் தமிழும் அதையொத்தேன்
குடித்தேன் பழமை குடைந்தேன் தமிழில்
குவித்தேன் இன்பங் கொண்டேன்காண்
நெடிதென் வாழ்வில் நிகழ்வும் கடிதென்
நேரும் வரையும் நிலைத்திட்டேன்

கடந்தேன் வாழ்வில் தடைகள் பலதும்
களித்தேன் என்றும் சொல்லற்றேன்
நடந்தேன் பாதைநலிந்தேன் விழுந்தேன்
நாளும் துயரைச் சந்தித்தேன்
அழுதேன் தொழுதேன் இறைவா என்றேன்
அரைதேன் நிலவைஅணிந்தோன் கை
எடுத்தோன் மழுவை இழிந்தேன் என்னை
இழந்தேன் உயிரும் எனவாகா

செடித்தேன் மலராய் சிரித்தேன் நெகிழ்ந்தேன்
சிவந்தேன் இதழும் விரித்தேனாய்
கொடுத்தேன் வாழ்வில் கொள்ளையின்பம்
கொள்ளா செய்தாய் கொடுஎன்றேன்
அலைந்தேன் ஆழி அலைகள் எனவே
அவலம்கொண்டேன் ஆனாலும்
நிலைத்தேன் நினைத்தேன் நிகழும்துன்பம்
நிகழா சக்தி காவென்றேன்

குலைந்தே கொள்ளா தேனோ அண்டம்
கோடி எழுந்தீச் சூரியனும்
விழுந்தே அணையாதென்னே விந்தை
விளைத்தார் யாரோ விளைவெண்ணி
எழுந்தேன் சக்தி என்றே நாளும்
எண்ணித்தான் கால் எடுத்திட்டேன்
கலைந்தே துன்பம் கவிதைபாடும்
கலையும் கொண்டே காண்கின்றேன்