Friday, August 24, 2012

காத்திருப்பேன் கண்ணா

கிராமத்தில் ஒரு வயல் காட்சி . அவனும் அவளும் மாறிமாறி பாடுகிறார்கள் )

வெயில் வெறுத்தே உலகைவிட்டு
வீழுதடி மனசுதொட்டு
வயல் கரையில் ஆடிஉலா வந்தவளே - உன்
வடிவெடுத்து வானம் செம்மை கண்டதல்லோ

முயல்பிடித்தேன் மூணுகாலு
நெல்விதைத்தேன் சோழமாச்சு
இவள் மயக்க கதையளந்த மன்னவரே - உள்ளம்
எதைநினைத்து கலங்குகிறாள் இன்றவளே

கண்ணிலிட்ட மைகறுப்பு
காணுங் குரல் தளதளப்பு
என்னவட்டம் போடுகிறாய் சின்னவளே- உன்
இளமை என்னை கொல்லுதடி பொன்னவளே

மண்ணை ஆழஉழுதுவைத்து
மாடுரண்டை விரட்டிகிட்டு
கண்ணை மேல வைக்கிறீரே சின்னவரே - இது
கண்ணியமோ கூறுமய்யா பொன்னவரே?

சலசலத்து ஓடும்நதி
சற்று நடை தவறுமடி
சிலுசிலுத்த புல்வரம்பில் சித்திரமே - நீ
சிரித்து விட்டால் மாமன் கெட்டான் இக்கணமே

கலகலப்பு பேச்சிலிட்டு
கன்னிமனம் கலங்கவிட்டு
நிலவு நேரம் கைபிடிக்கும் நல்லவரே- உங்க
நினைவி லிங்கு காயும் நிலா வெந்ததுள்ளே

கலயமொன்று இடுப்பில் வைத்துக்
கைவடிக்கா சிலைநடந்து
வலை விரித்தே எனைப்பிடித்தாய் வல்லவளே- இந்த
வானத்துக்கும் மழை இருக்கு ஈரமுள்ளே

உலையிலிட்ட சோற்றினிலே
ஒருபருக்கை பதமெடுத்து
நிலையறிந்து வடிச்சிடலாம் மன்னவரே - உங்க
நினைவி லேது படிக்கணும் நான் இன்னுமல்லோ?

சலசலத்துக் காளை பூட்டி
சாலையிலே ஓடும்வண்டி
கலகலக்கும் உன் சலங்கை சத்தமடி - என்
காலமெல்லாம் உன்முகந்தான் மிச்சமடி

நெல்முதிரும் கதிர் வளையும்
நேரம்வரும் அறுவடைக்கும்
நல்லவரே வளைந்து நின்றேன் பாரய்யா - எந்த
நாளில் எனைக் கைபிடிபாய் கூறய்யா

வயல் விதைத்து வளரவிட்டு
வளம் கொழிக்க அறுத்தெடுத்து
வசதியுடன் மாமன் நிற்பான் தையிலே - அப்போ
வாழ்வில் உனைக் கலந்திடுவேன் பொய்யில்லே

புயல் அடிக்கும் மழையும்கொட்டும்
புகுந்த வெள்ளம் குடியழிக்கும்
அயல் முழுக்க கிசுகிசுக்கும் நல்லவரே -- உயிர்
அதுவரைக்கும், துடித்திருக்கும் என்னவரே!

1 comment:

  1. ஆஹா.. அருமையா இருக்குங்க... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete